ஜெ. சிகிச்சை குறித்த ஆவணங்கள் பத்திரமாக இருக்கு.. அப்பல்லோ பிசி ரெட்டி அறிவிப்பு
ஜெயலலிதா சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளதாக அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளதாகவும் அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 75 நாட்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
அவர் மரணமடைந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்கள் பற்றி வாய் திறந்துள்ளார் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி.
மருத்துவமனை மறுப்பு
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டவர்களுக்கு, அப்பல்லோ மருத்துவமனை, 'எங்கள் நிறுவனம் அச்சட்ட வரம்பிற்குள் வரவில்லை. விபரங்களை எங்களால் வழங்க இயலாது என்று தெரிவித்து விட்டது.
தகவல் அறியும் உரிமை
மதுரை மீனாட்சி அம்மன் குழந்தைகள் டிரஸ்ட் நிர்வாகி ஜெகதலபிரதாபன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 17 கேள்விகளுக்கு பதில் கேட்டு, தமிழக அரசின் தலைமை செயலருக்கு மனு அனுப்பி உள்ளார்.
மருத்துவமனையில் சேர்த்தது யார்?
அதில் மருத்துவமனையில் யாருடைய அனுமதியில் சேர்க்கப்பட்டார். அவர்களின் பெயர், முகவரி, ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரை யார் யார் அவரை பார்த்தனர்.
சசிகலா, இளவரசி ஆகியோர் எத்தனை முறை ஜெயலலிதாவை பார்த்தனர். எத்தனை நாட்கள் உடனிருந்தனர்
உடல் உறுப்புகள் எந்த தேதியில், எந்த நேரத்தில் செயல் இழந்தன என்ற தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
ஆவணங்கள் விபரம்
ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இறந்தது வரை அளித்த சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் நகல்கள் வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான பதில்கள், இதுவரை தலைமை செயலரிடம் இருந்து வராததால், மேல் முறையீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
மவுனம் கலைந்த பிரதாப் ரெட்டி
இதனிடையே இன்று கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். சிகிச்சை அளிக்கப்பட்ட 75 நாள்களில் 71நாள்கள் தாம் சென்னையில் தான் இருந்ததாக மேலும் ஜெயலலிதா சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.