காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்!
கள்ளக்குறிச்சி: விபத்தில் இறந்த ஊழியருக்கு இழப்பீடு கேட்டு, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், திருச்சி-சென்னை சாலையில் அனைத்து வாகனங்களும் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இதுதான் மிக முக்கியமான சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடியை கடந்துதான் சென்னையில் இருந்து பெரும்பாலான தமிழக நகரங்களுக்கு சென்றாக வேண்டும். கோவை, சேலம், மதுரை, திருச்சி என எந்த பகுதியில் இருந்து சென்னை வருவதாக இருந்தாலும் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடந்து தான் சென்றாக வேண்டும்.
இந்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 250- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இதேபோல், இங்கிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் கடலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த இரண்டு சுங்கச்சாவடிகளையும் டிடிபிஎல் என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இரண்டு சுங்கச்சாவடிகளிலும் சேர்த்து 500- க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள்.
சென்னை என்பது கிண்டியுடனோ.. அண்ணா நகருடனோ முடியவில்லை.. கொதிக்கும் புறநகர் மக்கள்!
இந்த சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டும், தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டும் நேற்று முதல் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இந்த போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி புரியும் ஊழியர்களும் பங்கேற்றுள்ளார்கள்.
அதனால் நேற்று மாலையில் இரண்டாவது நாளாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால், சென்னை திருச்சி நான்கு வழிச் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டணமில்லாமல் சென்று வருகின்றன.