லதா ரஜினி மீதான குற்றச்சாட்டு பொய்யானது! - மீடியா ஒன் விளக்கம்
சென்னை: லதா ரஜினி மீதான பண மோசடி குற்றச்சாட்டு பொய்யானது என்று மீடியா ஒன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கோச்சடையான் படம் தொடர்பாக ரூ 10.2 கோடி லதை ரஜினி மோசடி செய்துவிட்டார் என்று கூறி நேற்று தனியார் நிறுவன நிர்வாகி புகார் அளித்தார்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் நேற்று வெளியான விளக்க அறிக்கை:
மீடியா ஒன் குளோபல் என்டர்டென்மெண்ட் மற்றும் ஈராஸ் இன்டெர்னேஷ்னல் இணைந்து நவீன தொழில் நுட்பத்தில் தயாரித்து வழங்கிய திரைப்படம் கோச்சடையான், இது கோவாவில் நடைபெற்ற 45 வது அகில இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
மீடியா ஒன் நிறுவனம், ஆட் பீரோ அட்வடைசிங் நிறுவனத்திடமிருந்து படம் வெளியாகும் முன் 33 கோடி ரூபாய் கடன் வாங்க பேச்சு வார்த்தை நடத்தியது. (Ad Bureau Advertising Private Limited Rayala Towers 781 Mount Road chennai-600002). ஆனால், ஆட் பீரோ வாக்குறுதியின் படி 30 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தவறிவிட்டது.
ஆட் பீரோ 10 கோடி மட்டுமே கொடுத்தது, இதனால் படம் மே 9, 2014 அன்று வெளியாக வேண்டியது தள்ளி வைக்கப்பட்டது. மீடியா ஒன் 10 கோடி ரூபாயில் 4.75 கோடியை திருப்பி செலுத்திய நிலையில், மற்றொரு 4 கோடி வங்கி வரைவோலையாக செலுத்தியது. மீதமுள்ள தொகை மற்றும் வட்டிக்கு, சொத்து ஆவணங்களை பிணையாக கொடுக்க சம்மதித்துள்ளது.
ஆட் பீரோ 10 கோடி ரூபாய்க்கு 6 மாத காலத்திற்கு 4 கோடிக்கும் அதிகமான வட்டியும் கேட்டது, மேலும் இந்த தகவலை பத்திரிக்கைக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்தி, நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களையும் அவமானப்படுத்தியது.
இந்த பணப் பரிவர்த்தனையில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் ஒரு போதும் தலையிடவில்லை. ஆட் பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை.
அவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அது ஆட்பீரோ புகார் அளித்துள்ள பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை. இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்த் அவர்களைச் சம்பந்தபடுத்தக் காரணம் அவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.