உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை தேவைப்படும்போது முடிவு செய்வோம் : தமிழிசை
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை பிறகு முடிவு செய்வோம் என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.
திருச்சி : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை முடிவு செய்வோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
திருச்சியில் நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பாஜகவின் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன.
அதன் பிறகு தமிழிசை செளந்தரராஜன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தற்போதைய பட்ஜெட்டை பற்றி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்த உள்ள பட்ஜெட்டை செயல்படுத்த மக்களின் ஆதரவு தேவை. அதனால் மாநிலம் முழுவதும், பட்ஜெட் விளக்கக் கூட்டத்தை நடத்த உள்ளோம்.தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும், உள்ளாட்சி தேர்தலுக்காக கூட்டணிக்கு நாங்கள் யாருக்காவும் காத்திருக்கவில்லை. பாஜக தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. எனவே, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி தேவையா இல்லையா என்பது குறித்து கலந்து ஆலோசிப்போம் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆதரவையும், தமிழகத்தில் எதிர்ப்பையும் காண்பித்து இரட்டை வேடம் போடுகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்திருப்பதற்குக் காரணம் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் தான். அதனை பாஜக சரி செய்து வருகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.