சந்தன கடத்தல் வீரப்பன் 10 ஆம் ஆண்டு நினைவு தினம்: ஹைகோர்ட் அனுமதி
சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பன், கடந்த 2004 அக்டோபர் 18ம் தேதி தமிழக அரசின் சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து வீரப்பன் நினைவு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும், இலவச துணிமணிகளை வீரப்பனின் மனைவி வழங்கி வருகிறார்.
வீரப்பன் மறைந்த 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காவல்துறையின் அனுமதி கோரி கடந்த மாதம் 17ம் தேதி மேட்டூர் டி.எஸ்.பி. மற்றும் சேலம் மாவட்டம், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் முத்துலட்சுமி மனு கொடுத்தார்.
ஆனால், எந்த காரணமும் தெரிவிக்காமல், கடந்த 13ம் தேதி மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர், தனது கணவரின் நினைவு தினத்தை அனுசரிப்பதற்கு அனுமதி வழங்கி உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியம், வீரப்பனின் நினைவு தினத்தன்று, அன்னதானம் வழங்கவே முடிவெடுத்துள்ளதாகவும், பேரணி எதுவும் நடத்தப்போவதில்லை என்பதாலும் அன்னதானத்திற்கு அனுமதி வழங்க சேலம் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.