இதற்கு முன்பு எந்த தமிழக ஆளுநராவது இப்படி செய்து பார்த்துள்ளீர்களா?
நெல்லை: தமிழக மக்கள் பலருக்கும் நினைவு தெரிந்து, முதல் முறையாக ஒரு ஆளுநர் இம்மாநிலத்தில் புனித நீராடிய நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது.
முதன்முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது 1992ம் ஆண்டு நடந்த மகாமகம் திருவிழாவில் பங்கேற்க தனது தோழி சசிகலா உடன் கும்பகோணம் சென்றிருந்தார் ஜெயலலிதா.
அப்போது ஜெயலலிதாவை பார்க்க கூடிய கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்த கோரச் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். இதன்பிறகு 2 வருடங்கள் மன்பு நடந்த மகாமகத்தில் பங்கேற்க ஜெயலலிதா வரவில்லை. இதனால் பாதுகாப்பு போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
எடப்பாடி, அமைச்சர்கள்
மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கலந்துகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரியில் புனிதநீராடினார். அமைச்சர்களும் புனிதநீராடினார்கள். இதுதவிர அதிமுக அமைச்சர்கள் அவ்வப்போது எங்காவது கோயில்களில் புனித நீராடுவது வழக்கம். தமிழகத்தை சேர்ந்த பிரபலமான சாமியார்களும் வட இந்தியாவிற்கு கூட சென்று புனித நீராடி வருவார்கள்.
ஆளுநர் புரோகித்
ஆனால், வெகு காலத்திற்கு பிறகு தமிழகத்தில், ஒரு பெரும் புள்ளி ஒருவர் புனித நீராடியுள்ளார். அவர் வேறுயாருமல்ல, மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித். தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா இன்று நடத்தப்பட்டது. அதில்தான், ஆளுநர் பங்கேற்று புனித நீராடினார். இதற்காக தென்காசிக்கு ரயிலில் சென்ற ஆளுநரை, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ரயில் நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.
பாபநாசம்
இதன்பிறகு, காரில் பாபநாசம் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாபநாசம், தாமிரபரணி நதிக்கரையில் புனித நீராடினார். வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆளுநர் மீது புனித குடங்களில் தண்ணீரை சேகரித்து ஊற்றினர். இதை பய பக்தியோடு ஏற்றுக்கொண்டார் ஆளுநர். இந்த செய்தி ஊடகங்களில் இன்றைய முக்கிய செய்தியாக மாறிப்போயிருந்தது.
ஆளுநர் செய்திகள்
தமிழகத்தில் எந்த ஒரு ஆளுநரும், புனித நீராட சென்றதாக நினைவு இல்லை. ஆனால் அதை பன்வாரிலால் புரோகித்தான் முறியடித்துள்ளார். இதுவரை பதவி வகித்த ஆளுநர்கள் ராஜ்பவனில் மட்டுமே இருந்து பணியாற்றிய நிலையில், நேரில் ஆய்வு நடத்துவதாக கூறி பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு ஊருக்காக போய் வந்தார். இப்போது புனித நீராடல் மூலம் மீண்டும் செய்திகளில் அடிபட்டுள்ளார் ஆளுநர்.