விவாதத்துக்கு நாங்க தயார்.. வருவீரா?.. தமிழிசைக்கு ஆளூர் ஷாநவாஸ் அதிரடி சவால்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும் தலைவர் திருமாவளவன் அவர்கள் மீதும் வன்மத்துடன் அவதூறு கக்கிய தமிழிசையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:
பாபர் மஸ்ஜித் இடத்தை சட்டப்புறம்பாக ஆக்கிரமிப்பு செய்த கலவரக் கும்பலின் தலைவி, எம்மை பார்த்து இட ஆக்கிரமிப்பாளர் என்கிறார்.
அதிமுகவை சிதைத்து அதன் தலைவர்களை மிரட்டிப் பணிய வைத்துள்ள ஆதிக்கக் கூட்டத்தின் தலைவி, எம்மை பார்த்து மிரட்டல் சக்தி என்கிறார்.
OPS ஐயும் EPS ஐயும் டில்லிக்கு வரவழைத்து அவர்களிடையே கட்டப்பஞ்சாயத்து செய்துவரும் மோடியின் தமிழ்நாடு ஏஜெண்ட், எம்மைப் பார்த்து கட்டப்பஞ்சாயத்து கட்சி என்கிறார்.
ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.கவினர் கலவரம் செய்தபோது, "எங்கள் மனது உடைந்திருக்கிறது; அதனால் பேருந்துகள் உடைக்கப்பட்டிருக்கிறது" என்று கூச்சமில்லாமல் கூவிய வன்முறைத் தலைவி தான், எம்மை பார்த்து வன்முறையாளர்கள் என்கிறார்.
தமிழிசைக்கு ஒரு சவால்!
உங்கள் கட்சிப் பொதுச் செயலாளர் வானதி மீது, உங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகி பாலசுப்பிரமணிய ஆதித்தன் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் பேசத் தயாரா? உங்கள் தேசியத் தலைவர் அமித்ஷா மகன் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து வெளிப்படையாக ஊடகத்தில் விவாதிக்க வருவீரா? ஊழல் நடக்கவில்லை எனில் அது தொடர்பாக நடக்கவிருந்த ஊடக விவாதங்களை ஏன் தடுத்தீர்கள்? மடியில் கனம் தானே!
உங்கள் கட்சி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசுவதற்கு நீங்கள் அஞ்சுவது போல், நாங்கள் அஞ்சமாட்டோம். எமது கட்சி அலுவலகத்தின் நிலை குறித்து உங்களோடு வெளிப்படையாக விவாதிக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். வருவீரா? என்று ஆளூநர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.