மக்களின் குரலாக ஒலித்த எம்.ஆர்.ராதா மகனே இப்படி பேசலாமா.. ஆளூர் ஷாநவாஸ் வேதனை
சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து நடிகர் ராதாரவி பேசியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் தி.மு.க.வில் இணைந்துள்ள நடிகர் ராதாரவி, சென்னையில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய வீடியோ பதிவை நண்பர் நடராஜன் ராஜகோபால் பக்கத்தில் கண்டேன். ராதாரவி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளதாக நரேன் எழுதியிருந்ததால், அதை ஆர்வமுடன் பார்த்தேன்.
வழக்கம்போல் ராதாரவி பேசினார். ஆனால், பேச்சினூடாக வைகோவையும் ராமதாசையும் விமர்சிப்பதாகக் கூறி, மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகவும் இழிவு படுத்தினார். மேடையில் இருந்த எழும்பூர் எம்.எல்.ஏ உட்பட அனைவரும் அதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரிக்கின்றனர். பார்க்கவே சகிக்க முடியவில்லை.
உடல் குறைபாடுள்ளவர்களை குருடு, செவிடு, ஊமை, நொண்டி என்றெல்லாம் கொச்சையாக அழைக்கக் கூடாது; மாற்றுத் திறனாளிகள் என்றே அழைக்க வேண்டும் என அறிவித்தவர் கலைஞர் அவரது கட்சியிலேயே இப்படி ஒருவர் பேசியது அருவருப்பானது. இதை உடனடியாக கனிமொழி கண்டித்துள்ளார். தோழர் தீபக் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கொதித்து எழுந்து ராதாரவி வீட்டை முற்றுகை இட்டுள்ளனர்.
எளிய விளிம்பு நிலை மக்களின் குரலாக ஒலித்தவர் எம்.ஆர்.ராதா. அவரது மகனே இப்படி பேசியிருப்பது வேதனையானது; கண்டிக்கத் தக்கது. ராதாரவி செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.