எஸ்வி.சேகரை கைது செய்யவில்லையா? என கேட்கும்போதே யாரை கைது செய்கிறார்கள் பாருங்கள்! ஆளூர் ஷாநவாஸ்
சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடிய மூதாட்டி கைது செய்யப்பட்டதற்கு ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடிய மூதாட்டி கைது செய்யப்பட்டதற்கு ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
500 ஏக்கர் வனப்பகுதி, ஆறுகள், 8 மலை பிரதேசங்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூதாட்டி கைது
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது.
பேஸ்புக்கில் கண்டனம்
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
யாரை கைது செய்கிறார்கள்?
அதில்"எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லையா? செய்யவில்லையா?" என்று நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. காவல்துறை யார் யாரை கைது செய்கிறது பாருங்கள்..
8 வழிச் சாலைக்காக விவசாய நிலத்தைப் பிடுங்கி, தம் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசை எதிர்த்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததற்காக மூதாட்டி கைது.
தேசவிரோதி
தேசியக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டே சட்டத்தை அவமதிக்கும் வகையில் சுற்றித் திரியும் சேகர் இங்கே தேசபக்தர் எனில், மண்ணைப் பாதுகாக்கப் போராடும் இந்த மூதாட்டி யார்? வழக்கம்போல் சமூக விரோதி தானே! இவ்வாறு ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாடா?
இதேபோல் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் மூதாட்டி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் மூதாட்டி கைது போட்டோவை பதிவிட்டுள்ள ஸ்டாலின் ஜனநாயக நாடா ? போலீஸ் வேட்டைக் காடா? என கேள்வி எழுப்பியுள்ளார்.