சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு.. வசமாக சிக்கிய நடிகை அமலா பால்!
சென்னை: நடிகை அமலாபால் போலி முகவரி கொடுத்து கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளவர் அமலாபால். இயக்குநர் விஜயுடன் திருமணம் நடைபெற்ற பிறகு விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாத்துறையில் ஒரு ரவுண்ட் வர முயன்று கொண்டுள்ளார்.
இதற்காக கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வருகிறார் அமலாபால்.
கவர்ச்சியில் அசத்தல்
திருட்டுப்பயலே-2 திரைப்படத்தில் அமலாபால் நடித்த கவர்ச்சி காட்சிகள் இணையத்தை கிறங்க வைத்துள்ளன. இதனால் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் நிலையில், வருமானமும் அவருக்கு அதிகரித்துள்ளதாம்.
புது கார்
இந்த நிலையில், ஆகஸ்ட் 4ம் தேதி, சென்னையில் அமலாபால் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் வகை சொகுசு கார் வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1.12 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலி முகவரி
இந்த காரை ஆகஸ்ட் 9ம் தேதி புதுச்சேரியில் அமலாபால் பதிவு செய்துள்ளார். இதற்காக, திலாஸ்பேட் பகுதியில் செயின்ட் ரெர்சா'ஸ் தெரு என்ற முகவரியில் வீடு இருப்பதை போல போலி முகவரி கொடுத்து கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொச்சியில் கார்
இந்த பென்ஸ் காரை கொச்சியிலுள்ள தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ள அமலாபால் கேரளாவிலுள்ள நிகழ்ச்சிகளுக்கு அதை பயன்படுத்தி வருகிறார். ஆனால் அதில்தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஹவாலா மோசடி பேர்வழி ஒருவர் சமீபத்தில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனத்தில் சுற்றியதை கண்டுபிடித்த கேரள போலீசார், புதுச்சேரி பதிவு வாகனங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றினர்.
வரி ஏய்ப்பு அம்பலம்
கேரள போலீசாரின் தீவிர விசாரணையில் அமலாபால் காரும் சிக்கியுள்ளது. அவர் போலி முகவரி கொடுத்து சுமார் ரூ.20 லட்சம் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. கேரள மோட்டார் வாகன சட்டப்படி கேரளாவில் வாகனத்தை பயன்படுத்தினால் ஓராண்டுக்குள் கேரள பதிவு எண்ணுக்கு அதை மாற்ற வேண்டும். காரின் மதிப்பில் 20 சதவீதம் வரியாக செலுத்த வேண்டி வரும்.
சிறை தண்டனை
வரி ஏய்ப்பு செய்தவர்களை அதிகபட்சம் 7 ஆண்டு சிறையில் தள்ள முடியும். அபராதமும் விதிக்கலாம். இதில் கேரள போலீசார், எந்த மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.