நாங்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே பிரிந்துவிட்டோம்..!- அமலா பால், விஜய் மனு
சென்னை: ஒரு ஆண்டுக்கு முன்பே நாங்கள் பிரிந்துவிட்டோம். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தனியாகத்தான் வாழ்கிறோம் என நடிகை அமலா பால் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அமலா பால் - இயக்குநர் விஜய் இருவரும் இன்று தங்கள் விவாகரத்து மனுவை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதற்காக இருவரும் தனித்தனியாக காரில் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி மரியா டில்டாவிடம் முதலில் அமலா பால் விவாகரத்து மனு கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், "எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் 10-ந்தேதி திருமணம் நடந்தது. ஒரு ஆண்டுக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015 மார்ச் 3-ந்தேதி முதல் பிரிந்து தனித் தனியாகத்தான் வாழ்கிறோம்.
எங்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. சேர்ந்து வாழ வழியில்லை. எனவே பரஸ்பரம் விவாகரத்து கேட்கிறோம். நாங்கள் ஜீவனாம்சமோ சொத்துக்களோ கேட்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு 6 மாதத்துக்கு தள்ளி வைத்தார்.