ஸ்ரீரங்கத்தில் இரட்டை இலையை பதம் பார்க்குமா 'அம்பும், பேனாமுனையும்'?
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது பிரச்சாரம் ஓய்ந்து வாக்குப்பதிவுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிமுகவின் இரட்டை இலையை பதம் பார்க்க பேனா முனையும், அம்பும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க., தி.மு.க., பி.ஜே.பி., மார்க்சிஸ்ட் என நான்கு முனை போட்டி. ஆனால் அ.தி.மு.க.தான் திரும்பிய பக்கம் எல்லாம் பிரசாரத்தை மேற்கொண்டது. இந்த ஆளும் கட்சி சூறாவளியில் சத்தமில்லாமல் இரண்டு வேட்பாளர்கள் ஸ்ரீரங்கத்தை கலக்கினர்.
ஒருவர் தமிழகமே அறிந்த சமூக ஆர்வலரும், பொதுநல வழக்கு போராளியுமான டிராபிக் ராமசாமி. ‘மக்கள் பாதுகாப்பு கழக'தின் சார்பில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் இவரது சின்னம் ‘பேனா முனை'.
இன்னொருவர் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளராக போட்டியிடும் ஹேமநாதன். இவரின் சின்னம் அம்பு. இந்த பேனா முனையும், அம்பும்தான் அ.தி.மு.க.வின் இரட்டை இலையை பதம் பார்க்கப் போகிறது என்கின்றனர்.
பேனா முனை
படை பரிவாரங்களுடன் வாக்கு கேட்டு வரும் அதிமுகவினர், பேனா முனை சின்னத்தில் போட்டியிடும் டிராபிக் ராமசாமியைக் கண்டு சற்றே அரண்டுதான் போயிருக்கின்றனர். எனவே அவரை வலிய போய் வம்புக்கு இழுக்கின்றனர். அவ்வப்போது திமுகவினரும் ராமசாமியை உரசித்தான் பார்க்கின்றனர்.
டேக் எ செல்ஃபி
துப்பாக்கி தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு கேட்டு வரும் டிராபிக் ராமசாமியை அடையாளம் கண்டு, அவரிடம் போய் ஆர்வத்துடன் வாக்காளர்கள் பேசுகிறார்கள். ‘உங்கள் சேவை நாட்டுக்கு தேவை' என வாழ்த்துகிறார்கள். கை குலுக்கி செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு 81 வயது முதியவர் டிராபிக் ராமசாமிக்கு இருக்கிறது என்கின்றனர்.
மறுமலர்ச்சி தேவை
‘பெரும் போராட்டத்தை நடத்தவும்,மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பெருங்கூட்டம் தேவையில்லை. ஒற்றை ஆள் போதும். அந்த ஒற்றை ஆள் நீங்களாக இருங்கள்' என்பதுதான் டிராபிக் ராமசாமியின் பேச்சாக இருக்கிறது.
சிந்தித்து வாக்களியுங்கள்
‘ஸ்ரீரங்கம் மக்கள் அளிக்கும் வாக்குகள் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ பயனளித்து ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆனால் நீங்கள் சிந்தித்து அளிக்கும் வாக்குகள் புதிய அரசில் மாற்றத்தை ஏற்படுத்த முன் உதாரணமாக விளங்கும்' என்றும் பேசப் பேச ஆளுங்கட்சியினர் வயிற்றில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
மாறிய தலையெழுத்து
பிரச்சாரம் முடியும் தருவாயிலும் கூட உற்சாகமாக பேசிய ராமசாமி, டெல்லியிலே பாஜகவின் தலையெழுத்தை ஆம் ஆத்மி கட்சி மாற்றிவிட்டது. அதேபோல ஒருநிலை ஸ்ரீரங்கத்திலும் ஏற்படும் என்றார்.
குறிவைக்கும் அம்பு
இதேபோல ஸ்ரீரங்கம் அடிமனைவாசிகளின் அம்பு குறி வைத்திருப்பது அ.தி.மு.க.வுக்குதான் என்கின்றனர். ‘ஸ்ரீரங்கம் நகர் நல சங்க'த்தின் தலைவராக இருக்கும் ஹேமநாதன் ‘அம்பு' சின்னத்தில் களம் புகுந்திருக்கிறார்.
அடிமனை பிரச்சினை
ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியிருக்கும் நிலங்களில் வீடுகள் கட்டி பல தலைமுறைகளாக 5 ஆயிரம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். ‘கோயில் நிலத்தில் குடியிருப்பதால் அடிமனை வாடகை கட்ட வேண்டும்' என்று சொல்லி வருகிறது கோயில் நிர்வாகம். ‘எங்களுக்கு பட்டா போட்டு தர வேண்டும்' என்கிறார்கள் குடியிருப்பவர்கள்.
நிறைவேற்றாத வாக்குறுதி
நான் வெற்றி பெற்றால் அடிமனை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்" என 2011 சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் பிரசாரத்தில் ஜெயலலிதா சொன்ன முக்கியமான வாக்குறுதி இது. ஆனால் அதை நிறைவேற்றவில்லை.
50000 வாக்குகள்
அடிமனை பிரச்னையில் பாதிக்கப்பட்டிருக்கும் 5 ஆயிரம் குடும்பங்களில் சுமார் 50 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் நகர் நல சங்கம்'தான் இந்த பிரச்னையை கையில் எடுத்து போராடுகிறது. ‘அடிமனை உரிமை மீட்பு குழு' என்ற பெயரில் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
சில்லறை பிரச்சினையா?
ஸ்ரீரங்கம் நகர் நல சங்கம்த்தலைவர் ஹேமநாதன், வேட்புமனு தாக்கல் செய்த போது டெபாசிட் தொகை பத்தாயிரத்தை சில்லறை நாணயமாக கொண்டு வந்து கொட்டினார். ‘‘அடிமனை பிரச்னையை பெரிய பிரச்னை. அதை அரசு சில்லறை தனமாக நினைத்துவிட்டது. அதற்கு பாடம் சொல்லதான் சில்லறை கொண்டு வந்தேன்'' என அப்போதே அதிரடியாகச் சொன்னார்.
ஒற்றை ஆளாய்
இவரும் ஒற்றை ஆளாய் கையில் அம்புச்சின்னம் ஏந்தி சுற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள தேர்தலில் இரட்டை இலையை குத்திக்கிழிக்க அம்பும், பேனா முனையும் தயாராகி வருவதால் அதிமுகவினர் சற்றே கலங்கித்தான் போயிருக்கிறார்களாம்.