ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டிஎஸ்பி, எஸ்ஐ கைது
ரூ. 1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டிஎஸ்பி, எஸ்ஐ ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
வேலூர்: மணல் லாரியை விடுவிக்க ரூ.1.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் தன்ராஜ். அங்குள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் லூர்து ஜெயராஜ். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணல் லாரி ஒன்றை மடக்கிபிடித்தனர்.
அதில் சட்ட விதிமீறல் இருந்ததை அறிந்து அதை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதையடுத்து டிஎஸ்பியும் , உதவி ஆய்வாளரும் லாரி உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது லாரியை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 1.50 லட்சத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைபோலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி லாரி உரிமையாளர் டிஎஸ்பியிடம் லஞ்சம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து தன்ராஜையும் லூர்து பொன்ராஜையும் கைது செய்தனர்.