ஆம்பூர் அருகே மருமகனை கூலிப்படை ஏவி கொலை செய்த மாமியார்.. மகளும் உடந்தை.. பரபர வாக்குமூலம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உறவினர்கள் மூலம் கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மாமியார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இரவு நேரங்களிலும் பணி இருப்பதாக கூறி விட்டு செல்லும் மனைவியை சந்தேகப்பட்டு அடித்ததால் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு இவர் மின் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி மகள் ஜெயந்தி மாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில் ஜெயந்திமாலா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்
ஸ்ஸ்ஸப்பா... ஒரே புழுக்கமா இருக்கே.. பெண் செய்த அந்த பகீர் காரியம்.. விக்கித்து போன மக்கள்!
நைட் டூட்டி போனதால் சந்தேகம்
ரமேஷ்பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்துறை ஒப்பந்த வேலையை விட்டு விட்டு சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் ரமேஷ்பாபு வின் மனைவி ஜெயந்திமாலா பணிக்கு சேர்ந்துள்ளார் இந்த நிலையில் இரவு 8 மணிக்கு பணி முடித்துவிட்டு வீடு திரும்பவும் ஜெயந்தி மாலா மீண்டும் 10 மணிக்கு மருத்துவமனையில் பணி இருப்பதாக கூறிவிட்டு இரவு நேரத்தில் அடிக்கடி சென்றுள்ளார். இதனால் மனைவின் மீது சந்தேகமடைந்த ரமேஷ் பாபு இதுகுறித்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
கூலிப்படை ஏவி
இதனைத் ஜெயந்தி மாலா தனது தாய் சரஸ்வதியிடம் இந்நிகழ்வு குறித்து தெரிவித்துள்ளார். தொந்தரவு அதிகமாகவே ஒருகட்டத்தில் மனைவி மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து ரமேஷ்பாபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். சரஸ்வதியின் உறவினரான ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் உள்ள ராமர் என்பவரின் மூலம் கூலிப்படையை வைத்து ரமேஷ் பாபு வைத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
விபத்து மூலம் சதி
கடந்த ஜூலை மாதம் ரமேஷ் பாபு வாணியம்பாடி பகுதிக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் ரமேஷ் பாபு விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். இவ்விபத்தில் எதிர்பாராதவிதமாக காயங்களுடன் உயிர் பிழைத்த ரமேஷ் பாபு அப்போது நண்பர்களின் அறிவுரையை ஏற்று காவல்துறையில் புகார் ஏதும் கொடுக்காமல் விட்டுவிட்டார். இதனால் மீண்டும் ரமேஷ் பாபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி மற்றும் மாமியார் இருவரும் மீண்டும் ராமர் மூலம் கூலிப்படையை அழைத்து விபத்து ஏற்பட்டிருந்தால் விபத்து காப்பீடு கிடைக்கும் 5 லட்சம் ரூபாயை கூலிப்படைக்கு பெற்றுக்கொள்ளலாம் என ஐந்து லட்சம் ரூபாய்க்கு பேரம்பேசி உள்ளனர்.
அடித்துக் கொலை
கடந்த மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை இரவு தனது கிராமத்தின் அருகிலுள்ள பாலாற்றின் கரையோரம் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரமேஷ் பாபுவை மது அருந்த உறவினர் அழைத்துள்ளார். அதனால் ரமேஷ் பாபு தனது நண்பரான மனோகர் என்பவரை அழைத்து கொண்டு சென்றுள்ளார் அங்கு சென்றபோது திடீரென மனோகரன் தனது வீட்டிலிருந்து மனைவி அழைப்பதாக கூறிவிட்டு உறவினர்களிடம் விட்டு விட்டு வந்துள்ளார். அங்கு ராமரின் நண்பர்களான மிட்டாளம் பகுதியை சேர்ந்த கௌதம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஆம்பூர் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர் அப்போது அளவுக்கு அதிகமான மதுவை ரமேஷ்பாபு விற்கு கொடுத்து ரமேஷ் பாபுவிடம் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை குறித்து ராமன் ரமேஷ் பாபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராமர் கூலிப்படையோடு சேர்ந்து ரமேஷ்பாபுவை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அருகிலுள்ள தரை பாலத்தின் அடியில் போட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தையும் அருகில் நிறுத்தி விட்டுச் விபத்து ஏற்பட்டது போல் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்....
போலீஸ் வழக்கு
இதுகுறித்து மனைவி ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடி கணவனைக் காணவில்லை என ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் கடந்த 28-ம் தேதி இரவு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஆலாங்குப்பம் பாலத்தின் அடியில் ரமேஷ்பாபு சடலமாக மீட்கப்பட்டார் இதனை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிறகு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அம்பலமான உண்மை
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் கைரேகை நிபுணர் பாரி மற்றும் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ரமேஷ்பாபு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ரமேஷ் பாபுவை மது அருந்த அழைத்துச் சென்ற மனோகரனை பிடித்து இரண்டு நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொன்றது எப்படி
ரமேஷ்பாபு வின் மாமியார் சரஸ்வதியின் உறவினரான மிட்டாளம் பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் ரமேஷ் பாபுவை கடந்த மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை மது அருந்த அழைத்ததால் நானும் ராமேஷ் பாபுவும் மது அருந்த சென்றேன். வீட்டில் இருந்து எனக்கு அழைப்பு வந்ததால் நான் மட்டும் தனியாக வந்துவிட்டேன் என காவல்துறையினரிடம் ரமேஷ்பாபுவின் நண்பர் மனோகர் தெரிவித்துள்ளார்.. இதனால் மிட்டாளம் பகுதியை சேர்ந்த ராமர் என்பவரை கைது செய்ய முடிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்தோம்
என்னுடைய உறவினரான சரஸ்வதி தனது மகளை ரமேஷ்பாபு சந்தேகப்பட்டு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதனால் சரஸ்வதி தமது மருமகனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்னிடம் கூறினார். அதனால் என் நண்பர்களான மிட்டாளம் பகுதியை சேர்ந்த கௌதம் மற்றும் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷ் பாபுவை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்தோம் என்றார்.
சிறையில் அடைப்பு
தொடர்ந்து 4 நாட்களாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்ததில் ரமேஷ் பாபுவின் மனைவி ஜெயந்திமாலா மற்றும் அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், 6 பேரை கைது செய்து ஆம்பூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இந்த கொலைகள் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஒருவர் பெங்களூர் பகுதியில் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.