டாஸ்மாக் கடை சூறையாடல்... அழிஞ்சிகுப்பத்தில் பெண்கள் மீது போலீஸ் தடியடி
வேலூர் மாவட்டம் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
வேலூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அழிஞ்சிக்குப்பம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அழிஞ்சிக்குப்பம் பகுதியில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை போலீசார் இழுத்து சென்றனர். காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் அரசு மேனிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளது.
டாஸ்மாக் கடையில் மதுகுடிப்பவர்கள் பள்ளிகளையும், விளையாட்டு மைதானத்தையும் பாராக பயன்படுத்துகின்றனர். குடித்து விட்டு பெண்களை அடிக்கின்றனர் என்றும், பெண்களை தரக்குறைவாக பேசுகின்றனர் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
பள்ளி அருகேயுள்ள பேருந்து நிறுத்தம் எதிரில் விளையாட்டு மைதானம் உள்ளது. இவ்விளையாட்டு மைதானத்திற்க்கு சுற்றுசுவர் இல்லை. இம்மைதானத்தில் இரவு நேரங்களில் சிலர் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இங்கு வரும் குடிமகன்கள் மது அருந்திய பின்னர் காலி பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுக்கள், பிளாஸ்ட்டிக் டம்ளர்கள், சைடு டிஸ்கள் மற்றும் அதனை எடுத்துவரும் கவர்கள் போன்றவற்றை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் சிலர் மது பாட்டில்களை மது மயக்கத்தில் உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் விளையாட்டு மைதானம் முழுவதும் மது பாட்டில்கள், உடைந்த கண்ணாடி துண்டுகள் என குப்பைகள் பல நிறைந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் புகார்.
இன்று டாஸ்மாக்கடைக்கு எதிராக போரடிய மக்கள் கடையை சூறையாடினர். பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்த வந்த பேரணாம்பட்டு வட்டாட்சியரின் வாகனத்தையும் பொதுமக்கள் சூறையாடினர். போலீஸ் வாகனத்திற்கும் தீ வைத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்த இடமே போர்களமாக மாறியது.
போலீசார் தாக்கியதில் வயதான பெண்மணி ஒருவர் மயக்கமடைந்தார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.