காவிரிக்காக ஆயுதம் ஏந்துவோம்- கோட்டை, ஆளுநர் மாளிகையை இழுத்து மூடுவோம்: அமீர், கவுதமன் எச்சரிக்கை
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல்லை நடத்த கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்றும் காவிரிக்காக கோட்டை மற்றும் ஆளுநர் மாளிகையை இழுத்து மூடுவோம் என்றும் இயக்குநர்கள் அமீர் மற்றும் கவுதமன் ஆகியோர் தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த போட்டிகளை வேறு மாநிலத்துக்கு இடம் மாற்ற கோரியும் அதை தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துவிட்டது. காவிரிக்காக தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் அவசியமா என்ற கேள்வியையும் போராட்டக்காரர்கள் முன்வைக்கின்றனர்.
இயக்குநர்கள் தொடக்கம்
தமிழர்களின் உரிமைகளை காக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை புதிய அமைப்பை இயக்குநர்கள் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ், அமீர், செல்வமணி, கவுதமன் உள்ளிட்டோர் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவராக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தேசதுரோகி
இதுகுறித்து அமீர் கூறுகையில் தேவைப்பட்டால் காவிரிக்காக ஆயுதம் ஏந்தியும் போராடுவோம். மத்திய அரசுதான் இறையாண்மைக்கு எதிரான தேசதுரோகி. காவிரி நீரை விட மறுக்கும் கர்நாடகா மீது தமிழக மக்கள் கொதிப்பாக இருக்கும்போது அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழகத்தில் அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமிக்கிறீர்கள் என்றால் தமிழக மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்வார்கள் என்ற தைரியமா என்று அமீர் கேள்வி எழுப்பினார்.
காவிரிக்காக...
இதுகுறித்து இயக்குநர் கவுதமன் கூறுகையில் தமிழகத்தைக் காக்க யுத்தத்தை எதிர்கொள்வோம். மண்ணில் மானங்கெட்டு ஒருபோதும் சாகமாட்டோம். ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும். அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா நியமனத்தை வாபஸ் பெற வேண்டும்.
சூரப்பாவை திரும்ப பெற வேண்டும்
கத்திப்பாரா பாலத்தை மூடியது போல கவர்னர் மாளிகையை முடுவோம். சூரப்பாவை திருப்ப பெற வேண்டும், தலைமை செயலகத்தையும் பூட்டு போடுவோம். எங்களை காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்துவோம் என்றார் இயக்குநர் கவுதமன்.