ஜெயித்தது கார்பொரேட் கம்பெனிகள்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முழு பலன் கிடைக்கவில்லையே
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இரண்டாவது பிரதான கோரிக்கையாக கருதப்பட்ட குளிர்பான எதிர்ப்பு இப்போது அந்த குளிர்பானத்திலே கரைந்து விட்டது.
Recommended Video
சென்னை: அமெரிக்க குளிர்பான நிறுவனத்தால் தான் ஜல்லிக்கட்டு மாடுகள் அழிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து குளிர்பானத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலையை குளிர்பானத்திலிருந்து வெளியாகும் நுரையே கரைத்து விட்டது.
தமிழர்கள் யார், இளைஞர்களின் சக்தி என்ன என்று உலகையே திரும்பி பார்க்க வைத்த முக்கியமான நிகழ்வுகளில் பிரதானமானது ஜல்லிக்கட்டு போராட்டம். மத்திய, மாநில அரசுகளை மட்டுமின்றி உலக ஊடகங்களையும் திணறடித்த இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கிளை போராட்டமாக கருதப்படுவது வெளிநாட்டு குளிர்பானத்திற்கு எதிரான குரல்.
ஜெர்சி பாலை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிரபல அமெரிக்க குளிர்பான நிறுவனம் ஒன்று திட்டமிட்டு, பீட்டாவின் துணையுடன் நாட்டு மாடுகளை அழிக்க நினைத்த திட்டத்தின் விளைவு தான் ஜல்லிக்கட்டு போராட்டம். அதனால் அமெரிக்க குளிர்பான நிறுவனத்தின் குளிர்பானத்தை குடிக்க மாட்டோம் என ஏராளமான இளைஞர்களும், போராளிகளும் சத்தியம் செய்தனர்.
திகைப்பூட்டிய ஒற்றுமை
இவர்களின் சத்திய வீடியோக்களால் சமூகவலைதளங்களே திக்குமுக்காடி சோடா குடிக்கும் ரேஞ்சுக்கு திணறியது. ஜல்லிக்கட்டுக்காக களத்தில் நின்று போராடிய சகோதரர்களுக்காக அனைவரும் இந்த சத்தியபிரமாணத்தை இணையதளத்தை சாட்சியாக வைத்து ஏற்றுக்கொண்டனர். இளைஞர்களின் இந்த ஒற்றுமை அனைவரையும் திகைப்பூட்டியது. முக்கியமாக அரசையும், குளிர்பான நிறுவனங்களையும்...
வியாபாரிகளும் ஆதரவு
மாணவர்களின் போராட்டத்தை விளையாட்டுத்தனமாக பார்த்த அரசுக்கும், குளிர்பான நிறுவனங்களுக்கும், பொளாதார ரீதியாக ஏற்பட்ட நஷ்டம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. விளையாட்டு பசங்க என்று நினைத்தவர்கள் விளைவுகளை ஏற்படுத்தி விட்டதை உணர்ந்த குளிர்பான நிறுவனத்தினர், மூன்றாந்தர குளிர்பானத்தை சப்ளை செய்வதை நிறுத்தி விட்டு முதல் தரத்தை தமிழகத்திற்கு சப்ளை செய்து ஆசை காட்ட ஆரம்பித்தனர்.
ஆம், நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் குளிர்பானமும், தெருக்கடையில் வாங்கி குடிக்கும் குளிர்பானமும் ஓரே பெயரை கொண்டு இருந்தாலும் ரகத்தில் அது வேறு இதுவேறு. அவ்வாறான மூன்றாந்தரம் தான் தமிழகம், பீகார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. நம் மாநிலத்தை மூன்றாந்தரமாக பிரித்து பார்த்த நிறுவனத்திற்கு, இளைஞர்களின் இந்த முடிவு, முதலுக்கே மோசமாகிப் போனது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு வியாபாரிகள் சங்கத்தையும் சேரும்.
குளிர்பானத்தை மறந்த மாணவர்கள்
ஒரு கட்டத்தில் அந்நிய குளிர்பானங்களை மறந்த இளைஞர்களின் கவனம் நம் நாட்டு தயாரிப்பு பானங்கள் மீது திரும்பியது. இளநீர், பதநீர், பாட்டிலில் விற்பனை செய்யும் திட்டம் உள்ளிட்டவைகள் அமோகமாக தொடங்கப்பட்டன. மோர், ரோஸ் மில்க் என்று இளைஞர்கள் தங்களின் டெஸ்ட்டை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தனர். ஒருக்கட்டத்தில் குளிர்பானங்கள் எந்த கடைகளிலுமே கிடைக்காத நிலை உருவானது. மதுபானங்களைப் போல மறைத்து வைத்து குளிர்பானங்கள் பிளாக்கில் விற்பனை செய்யவும் செய்யப்பட்டன.
டாஸ்மாக்கின் கிளைக்கடைகள்
குளிர்பான விஷயத்தில் அரசு எந்த நிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில், எப்போது தொழிலதிபர்கள் பக்கம் தான் அரசாங்கம் நிற்கும் என்பதை மீண்டும் நிரூபித்தது. அரசின் பிரதான துறையாக கருதப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் ஏலம் எடுத்து நடத்தப்படும் கிளைக்கடைகளில் அந்நிய குளிர்பானத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்றன. அங்குதான் மீண்டும் மாநிலத்தின் குடிமக்களும் இளைஞர்களும் மீண்டும் குளிர்பானத்திற்கு அடிமையாக ஆரம்பித்தனர்.
மார்க்கெட்டிங்கில் ஜெயித்த நிறுவனங்கள்
ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தும் சில நாட்களிலே மீண்டும் குளிர்பான விற்பனை அமோகமாக தொடங்கியது. கடைகளிலும் பழையபடி அனைத்தும் கிடைத்தன. போராட்டத்திற்கு ஆதரவு தந்த வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வது தான் வியாபார தர்மம் என தர்மம் பேசினர். சில மாதங்களிலே போராளிகளின் வைராக்கியத்தை, அந்த கார்ப்பனேட்டட் திரவம் அரிக்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் குளிர்பான விளம்பரங்களை போட்டு மக்களை தூண்டி விட்டதில் காட்சி ஊடகங்களின் பங்கும் கணிசமானது தான்.
ஒரு ஆண்டு முடிந்துவிட்டது.
தலைநிமிர வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று ஓராண்டு ஆகிவிட்டது. நம்மில் தீயாக கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பை பற்ற வைக்க அத்தனை போராளிகள் வெயில், குளிர் என காய்ந்துக்கொண்டிருந்த நாட்களை மனதில் நிழலாடுகிறது. நம்முல் எரிந்த வைராக்கிய தீயை குளிர்பானத்திலிருந்து வெளியாகும் சிறு நுரைகள் அணைத்து விட்டன. இதுதான் அரசு மற்றும் அந்நிய குளிர்பான நிறுவனங்களின் வெற்றி. இருந்தாலும் போராட்டத்தின் போது செய்த சத்தியத்தை பல இளைஞர்கள் இன்று காப்பாற்றி குளிர்பானத்தை தவிர்த்து வருவது தான் உண்மை. தனிமனித ஒழுக்கம் தான் போராட்டத்தின் முதல் வெற்றி என்பதை இந்த ஜல்லிக்கட்டு ஓராண்டு நிகழ்வு தினம் நமக்கு பறைசாற்றுகிறது.