பளபள பட்டு வேட்டி.. தக தக பட்டுச்சேலை.. அரோகரா.. திரும்பி பார்க்க வைத்த டக்ளஸ்
பழனி முருகன் கோவிலில் அமெரிக்க பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பழனி: பளபள பட்டுவேட்டி, தகதக பட்டுசேலை கட்டிக்கொண்டு, அரோகரா கோஷத்தை எழுப்பிய டக்ளஸ் பழனி முருகன் கோவிலில் இருந்தவர்கள் எல்லாரையுமே திரும்பி பார்க்க வைத்துவிட்டார்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிப்பவர்தான் டக்ளஸ் புரூக்ஸ். இவர் அங்குள்ள ஒரு யூனிவர்சிட்டியில் பேராசிரியர் என்பதால், சமஸ்கிருதம், இந்துத்துவம் பற்றி மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறார். அதனால் இவருக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. இதனால் டக்ளஸ் தன் பெயரை சுந்தரமூர்த்தி என்றே மாற்றி கொண்டார்.
இவரை போலவே அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். வருடம்தோறும் அமெரிக்காவிலிருந்து கிளம்பி அறுபடை வீடுகளுக்கும் வந்துவிட்டு போகிறார்கள்.
18 அமெரிக்கர்கள்
அப்படி சில நாட்களுக்கு முன்பு டக்ளஸ் தமிழ் ஆர்வம் கொண்ட 18 பேரை தன்னுடன் அழைத்துகொண்டு பழனிக்கு வந்தார். அப்படி வரும்போது இவர்கள் எல்லோருமே பட்டுவேட்டி, பட்டுசேலை என ஜொலித்ததுதான் இதில் ஹைலைட் சமாச்சாரமே.
பட்டுப்புடவை
கோயிலுக்குள் வெளீர் நிறத்தில் வித்தியாசமாக தெரிந்த இவர்கள் நெற்றியில் குங்குமமும், திருநீரும், சந்தனமும் கலந்து கூடுதல் மெருகை தந்தது. தழைய தழைய புடவையை நேர்த்தியாக கட்டிக் கொண்டு பெரிய பொட்டுக்களை வைத்திருந்தனர் பெண்கள்.
முருகனுக்கு அரோகரா
முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும்போது, இவர்கள் அனைவரும் "அரோகரா.. முருகனுக்கு அரோகரா கோஷம்" அங்கிருந்த நம் ஆட்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தை தந்தது. இதில் டக்ளஸ் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.
அரோகரா சத்தம்
முருகனுக்கு அரோகரா என்ற வார்த்தை அமெரிக்கர்களின் வாயில் நுழைந்து மழலை தமிழாக வெளிப்பட்ட அழகே தனிதான். பழனி மலை உச்சியில் வித்தியாசமாக கேட்ட அரோகரா சத்தம், அடுத்ததாக திருப்பரங்குன்றத்திலும் ஒலிக்க போகிறது...ஆம்.. அனைவரையும் கூட்டிக் கொண்டு டக்ளஸ் இப்போது அங்குதான் சென்றிருக்கிறார்!