தூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல்.. தண்டனை விதிக்கப்பட்ட 35 பேரும் விடுதலை
தூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்து சிறை தண்டனை பெற்ற வழக்கில் அமெரிக்க கப்பல் அதிகாரிகள் 35 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: தூத்துக்குடி கடற்பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த வழக்கில் தண்டனை பெற்ற அமெரிக்க கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் 35 பேரை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விடுதலை செய்தது.
அமெரிக்காவின் எம்.வி. சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பல் அத்துமீறி தூத்துக்குடி கடற்பரப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு நுழைந்தது. இதையடுத்து அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.
அப்போது அதிலிருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பாதுகாப்பு படை வீரர்களும் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் 35 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 35 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தூத்துக்குடி நீதிமன்றம் 35 பேருக்கு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்டபோது அபராதம் ஏதும் அவர்களிடம் இருந்து பெற்றிருந்தால் அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க பாஸ்போர்ட் முடக்கியிருந்தால் 35 பேரும் மனுதாக்கல் செய்யலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.