பகலை இரவாக்கிய கார்மேகம்... மழையால் சென்னைவாசிகள் ஜில் ஜங் சக்!
சென்னையில் பகலை இரவாக்கும் வகையில் கார்மேகம் சூழ்ந்துள்ளது கோடை கால வெப்பத்தை தணித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான வானிலையே நிலவும் என்று வானிலை மையம் கூறிய நிலையில், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பல்வேறு பகுதிகளில் வறட்சி தலைவிரித்து ஆடுகிறது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதிக்கு வந்து போராடுவது தொடர்கதையாகிவிட்டது.
வெப்பத்தின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருந்த சென்னை மக்களுக்கு இன்று நல்ல நாளாகவே அமைந்துள்ளது.
கோடை மழை
வளிமண்டலத்தில் மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி தமிழகத்தில் தற்போது நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று வேலூர், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை
மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் கார்மேகம்
இந்நிலையில் சென்னையில் இன்று காலையில் சுள்ளென சுட்டெரித்த வெயில் 10 மணிக்கு மேல் பவர் மங்கி வானில் கார்மேகம் சூழ்ந்ததால் சட்டென் ஊட்டி கிளைமேட்டிற்கு மாறிவிட்டனர் சென்னை வாசிகள். சென்னை முழுவதும் பரவலாக பல இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
சென்னைவாசிகள் ஜாலி
கிண்டி, ராமாபுரம், வடபழனி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், ஆதம்பாக்கம், பொழிச்சலூர், தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெய்யும் மழையால் வெப்பம் தனிந்து இதமான காற்று வீசுகிறது. சென்னை மக்கள் மகிழ்ச்சியுடன் கோடை மழையை அனுபவித்து வருகின்றனர்.