தலைவா, கிளம்பி வரவா.. ரஜினியை அணத்தும் அமீத் ஷா!
சென்னை: ரஜினிகாந்த்தை பாஜகவுக்கு இழுக்க மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பாஜக. தமிழகத்தில் வலுவாக காலூன்ற எந்தக் காரணமும் இல்லாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் பாஜக, ஜெயலலிதா கைதை வைத்து எப்படியாவது வசதியாக உட்காரந்து விடத் துடிக்கிறது. இதற்காக அது ரஜினி என்னும் பெரிய மீனுக்கு வலை வீசி வருகிறது.
பாஜக தலைவர் அமீத் ஷா, ரஜினியை இப்போது நேரடியாக சந்திக்க வரப் போகிறாராம். ஹைதராபாத்தில் வைத்து ரஜினியைச் சந்திக்க முதலில் திட்டமிட்டிருந்தார் அமீத் ஷா. ஆனால் அதற்கு ரஜினி மறுத்து விட்டாராம். சென்னைக்கு நான் வந்ததும் பார்க்கலாம் என்று ரஜினி கூறி விட்டதால், சென்னையில் வைத்து ரஜினியை சந்திக்க முடிவு செய்துள்ளாராம் அமீத் ஷா.
பாஜக இழுப்பது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ரஜினியும் கூட அரசியலில் நுழைவது குறித்து ஆழம் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கிடைத்த கேப்பை ஃபில் செய்ய முயலும் பாஜக
தற்போது தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் அதிமுக அரசு ஸ்தம்பித்து நிற்கிறது.
துணிந்து இறங்க முடியாத திமுக
மறுபக்கம் திமுக துணிச்சலுடன் இந்த பின்னடைவை பயன்படுத்தி அரசியல் செய்ய முடியாத நிலை. காரணம் கனிமொழி. ஜெயலலிதா இப்போது உள்ளே போயிருக்கிறார். சீக்கிரமே கனிமொழிக்கும் இதே கதிதான் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. எனவே திமுகவால் அதிரடியாக எதையும் செய்யமுடியாத நிலை.
வெறும் அறிக்கையுடன் மற்றவர்கள்
பிற கட்சிகள் எதுவும் பலசாலிகளாக இல்லை. தேமுதிகவும் சரி, பாமகவும் சரி எந்தவிதமான பாதிப்பையும் உடனடியாக ஏற்படுத்த முடியாத நிலை. அவர்களுக்கு ஒட்டு மொத்த தமிழகம் படை திரண்டு வரும் பாக்கியமும் அவர்களுக்கு இல்லாத சூழல். எனவே அவர்கள் அறிக்கையுடன் தங்களை புதுப்பித்தபடி இருக்கின்றனர்.
காங்கிரஸ் .. சொல்லத் தேவையில்லை...!
காங்கிரஸ் கட்சி குறித்து சொல்லவே தேவையில்லை. கடைசி வரை "பாராசைட்" கட்சியாகவே அது இருக்க வேண்டியது அதன் தலையெழுத்து.
சுதாரிக்கும் பாஜக
இந்த நிலையில் ரஜினியை வைத்து தான் பிழைக்க பாஜக முடிவெடுத்து விட்டது. இதற்காக ரஜினியை இழுக்கும் முயற்சிகளை அது தீவிரமாக்கியுள்ளது.
நச்சரிப்பு தாங்கலையே
ரஜினியை நாலாபுறத்திலும் அது வளைத்து வலியுறுத்தி வருகிறது. இந்த நச்சரிப்பைத் தாங்க முடியாமல் என்ன செய்யலாம் என்ற யோசனைக்கு ரஜினி தள்ளப்பட்டிருக்கிறார்.
போன் போட்ட அமீத் ஷா
லிங்கா படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத் போயிருந்த சமயத்தில் அமீத் ஷா அவருக்குப் போனைப் போட்டு, தலைவா கிளம்பி வரவா, பேசலாம் என்று கேட்டிருக்கிறார். டென்ஷனாகிப் போன ரஜினி, இல்லை, இல்லை நான் சென்னைக்கு வந்துவிடுகிறேன், வந்ததும் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளாராம்.
அண்ணனிடம் போன எதியூரப்பா
மறுபக்கம் கர்நாடகத்திலிருந்தும் ரஜினியை நெருக்க ஆரம்பித்துள்ளனர் பாஜகவினர். இந்த வேலையை எதியூரப்பா செய்து வருகிறார். அவர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்க்வாட்டை நேரில் போய்ப் பார்த்துப் பேசியுள்ளார்.
செய்கூலியும் இல்லை, சேதாரமும் இல்லை!
புதுக் கட்சி ஆரம்பிச்சு செலவு செய்து, அந்தப் பஞ்சாயத்துக்கு ரஜினி சரிப்பட்டு வர மாட்டார். பேசாமல் அவர் பாஜகவில் சேர்ந்தால், தமிழகத்தின் முதல்வரானால் நிச்சயம் அவருக்கும் பலன் கிடைக்கும், பாஜகவும் பலம் பெறும் என்று கூறினாராம் ரஜினியின் அண்ணனிடம்.
ஆழம் பார்க்கும் ரஜினி
இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாக படையெடுத்து நெக்கி வரும் நிலையில் ரஜினியும் தனது ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக உள்ளாராம். ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் வேலையிலும் அவர் இறங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதோ.. அந்த ராகவேந்திராவுக்கே வெளிச்சம்!