தமிழகத்திற்கு குறி வைக்கும் பாஜக.. திமுக எம்.பிக்கள் பின்னணி குறித்து தகவல் சேகரிக்குதாம்!
சென்னை: தமிழகத்தை மட்டும் இழந்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது பாஜக தலைமை. இதனால் திமுக எம்பிக்களைக் குறி வைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது. ஓபிஎஸ் மகன் போட்டியிட்ட தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.
இதன் பிறகு பாஜக தமிழகத்தில் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்று தீவிரமாக யோசித்து வருகிறது. இந்த நிலையில் அமித்ஷா தமிழகத்தை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளார். இங்கு வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் மற்றும் கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் குறித்து விசாரிக்க தனது கட்சியினருக்கு உத்தரிவிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மரம் நன்கு செழித்து வளர வேண்டும் என்றால் தனக்கு கீழே எந்த தாவரத்தையும் நன்றாக வளர விடாது. குறிப்பாக ஆலமரம் தனக்கு கீழே எந்த மரத்தையும் வளர விடாது. பாஜகவும் இதே யுக்தியை கையில் எடுத்துள்ளது. ஒரு இடத்தில் தங்கள் கட்சியை வளரச் செய்யும் அதே வேளையில் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்துதல் என்ற முறையை கையாண்டு வருகிறது. அந்த வகையில் திமுக மற்றும் கூட்டணி எம்.பி.க்களின் வரலாறு, மற்றும் புவியியல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறது பாஜக.
மாயமான விமானம் எங்கே.. தகவல் கொடுத்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி.. இந்திய விமான படை அறிவிப்பு
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் வேலூர் தவிர 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் தேனி தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றது. இதில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாற்றுக் கட்சியினர் உட்பட திமுக உறுப்பினர்களாக 23 பேரும் பிற கூட்டணி கட்சியினரும் உள்ளனர்.
இந்த 37 பேரின் அரசியல் வாழ்வு, எந்த கட்சியில் முதலில் இருந்தார்கள், அரசியலில் அவர்களுக்கனா செல்வாக்கு, எப்படி அரசியலில் உயர்ந்தார்கள், அவர்களின் கொள்கை பிடிப்பு எந்த அளவிலானது, கட்சிக்கு எந்த அளவுக்கு விசுவாசமானவர்கள், அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன, எந்த வகையில் அவர்களுக்கான வருமானம், இப்போதைய தொழில் என்ன, ஆரம்ப கால தொழில், ஆரம்ப கால சொத்து, இப்போதைய சொத்து உட்பட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவரங்கள் அடிப்படையில் இவர்களுக்கான வியூகங்களை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் எம்.பி.க்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, எம்.பி. ராஜினாமா, இடைதேர்தல், அந்த இடைதேர்தலில் ராஜினாமா செய்த அதே எம்.பி வேட்பாளாராக போட்டி என்ற செய்திகள் அடிக்கடி வரலாம். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்தானே.