இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை.. அமித்ஷா உறுதி.. நமது அம்மா தகவல்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமித்ஷா உறுதியளித்ததாக நமது அம்மாவில் செய்தி வெளியாகியுள்ளது.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து முடிவு செய்வதற்காக மாநில முதல்வர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கூட்டம் டெல்லியில் இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இந்த கூட்டத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஜெயலலிதாவின் நீண்ட நாள் கோரிக்கையான இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து கோரிக்கை வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வதாக அமித்ஷா உறுதி அளித்தார். இந்த தகவலை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா வெளியிட்டுள்ளது.