அம்மா உணவகத்தில் நிர்வாக குளறுபடி.. சி.ஏ.ஜி அறிக்கை சுளீர்.. அரசுக்கு நஷ்டம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: அம்மா உணவக நிர்வாகம் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டதால் மாநில அரசுக்கு ரூ.5.69 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கை சுட்டி காட்டியுள்ளது.
இந்திய ஆடிட்டர் ஜெனரல் அளிக்கும் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையொன்றில், அம்மா உணவகத்தால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலுள்ள அம்மா உணவகங்களில் 4 லட்சம் சப்பாத்தி தயாரிக்கும் திறன் கொண்ட மிஷின்கள் வாங்கப்பட்டதாகவும், அப்போது, அதன் தரம் பரிசோதித்து பார்க்கப்படவில்லை எனவும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
மாநகராட்சி டெக்னிக்கல் ஆய்வு கமிட்டி கூட, அந்த மிஷின் தரமில்லை என 2013ல் சுட்டி காட்டியுள்ளது. அதற்குள்ளாக கான்டிராக்டருக்கு ரூ.1.33 கோடியை மாநகராட்சி வழங்கிவிட்டது.
இதுகுறித்து கான்டிராக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டபோது, 3 மாதங்களுக்குள் தரத்தை சீர் செய்வதாகவும் அல்லது பணத்தை திருப்பி தருவதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இதுவரை இரண்டுமே நடக்கவில்லை.
இருந்தும் கூட, கடந்த வரும் மே மாதம்வரையிலான நிலவரப்படி, அந்த கான்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மிஷின்களுக்கு வாரண்டி தர வேண்டும் என்ற நிபந்தனையை கூட மாநகராட்சி விதிக்கவில்லை.
பழுதடைந்த மிஷினை வைத்து, அதை ரிப்பேர் பார்ப்பதிலேயே செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறு, அரசு கருவூலத்திற்கு ரூ.5.69 கோடி நஷ்டமடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கை சுட்டி காட்டுகிறது.