வெற்றிகளுக்கே விலாசமாகிய வீரத்திருமகளே... சட்டசபையில் ஓபிஎஸ் கவிதை - பொறுமையாய் கேட்ட திமுகவினர்
சென்னை: தமிழக சட்டசபையில் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதாவை வீரத்திருமகளே... வாழும் மனித தெய்வமே என்று அம்மா புகழ் கவிதை பாடி 2016-17ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். இந்த பட்ஜெட் தாக்கலின் போது எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்யவில்லை.
தமிழக சட்டசபையின் 2016 -17ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக அம்மா புகழ் பாடி கவிதை வாசித்தார் ஓ.பன்னீர் செல்வம். அதில் ஜெயலலிதாவின் துதி பாடல்தான் அதிகம் இருந்தது. ஒபிஎஸ் அம்மா புகழ் கவிதை வாசிக்க வாசிக்க வரிக்கு வரி கை தட்டினர்.
ஓபிஎஸ் வாசித்த கவிதையில் முக்கிய வரிகளாக
கனிவு தந்த உடையாக...
இரக்கத்தின் திருமகளாக...
ஈகைக்கே இலக்கணமாக...
மக்களுக்காகவே உதிக்கின்ற மாசறு இதயமாக...
மானிட உடையில் வாழுகிற மனித தெய்வமே!...
மாதவத்தில் வாழுகின்ற தியாகத்தின் சொரூபமே!
புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில்
6ம் முறையாக தமது ஆற்றல் கரங்களில் அரசாட்சி செங்கோல் ஏந்தி ஆட்சி செய்யும் அம்மா என்னும் சிங்கமே!
புத்தனை போல் பொறுமை காத்து
10 கோடி தமிழகர்களின் இதயத்தில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும் எங்கள் அம்மாவே!
வெற்றிகளுக்கே விலாசமாகிய வீரத்திருமகளே...
என்றெல்லாம் புகழ்பாடி பொற்பாதங்களில் வணங்கி பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார் ஓ.பன்னீர் செல்வம். இந்த கவிதையை ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க வரிக்கு வரி அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். முதல்வர் ஜெயலலிதா எந்த வித ரியாக்சனையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். எதிர்கட்சியினர் பட்ஜெட் உரையை புறக்கணிக்காமல் ஓ.பி.எஸ் வாசித்த பட்ஜெட்டை கவனித்தனர்.