திராவிடத்தை தவிர்த்த டிடிவி தினகரன் - அமமுக மக்கள் மனதில் இடம்பிடிக்குமா?
திராவிடம் என்ற பெயரை தவிர்த்து தனது அமைப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயர் சூட்டியுள்ளார்.
Recommended Video
மதுரை: திராவிடத்தை தவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் டிடிவி தினகரன். ஆட்சியை பிடிப்போம் என்றும் கூறியுள்ளார். ஆட்சியை பிடிப்பது எளிதான காரியமல்ல என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து
அமைப்பின் பெயருக்கு உறுப்பினர்களை சேர்க்கச் சொல்லியுள்ளார் தினகரன், அதிமுகவில் இருப்பவர்கள் அமமுகவிற்கு மாறுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஆர். கே நகரில் வென்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்த டிடிவி தினகரன் முதல்வர் நாற்காலியில் அமர்வாரா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதும் அரசியல் ஆர்வலர்களின் கருத்தாகும்.
திமுக தொடங்கி லதிமுக வரை
திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, லதிமுக என தமிழகத்தில் கட்சி பெயரோடு திராவிடத்தை இணைத்தவர்கள் உள்ளனர். அதிமுக, திமுகவிற்கு இடையே பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. அது திராவிடம் தவிர்த்த கட்சியாக பார்க்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் திராவிடம் என்ற பெயர் இல்லை. மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளின் பெயர்களில் திராவிடம் இல்லை
அதிமுக உதயம்
திமுகவில் இருந்து தனியாக பிரிந்த எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். திமுகவில் இருந்து பிரிந்த வைகோ மதிமுகவையும், டி. ராஜேந்தர் லதிமுகவையும் உருவாக்கினார்கள். கட்சிப்பெயரில் திராவிடத்தை இணைத்துக்கொண்டனர்.
ஜெயலலிதா காலம்
எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. அப்பொழுது அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணியாக செயல்பட்டது சின்னங்கள் இரட்டை புறாவாகவும், சேவலாகவும் மாறியது. 1989ல் அணிகள் மீண்டும் இணைந்த பின்னர் இரட்டை மீட்கப்பட்டு கடந்த 30 ஆண்டு காலமாக ஜெயலலிதா தலைமையில் கட்டுக்கோப்பாக செயல்பட்டது. 1991,2001, 2011,2016ல் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது அதிமுக.
கமல் கட்சி
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பிரபல நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தனர். இதில் கமல் அதிகாரப்பூர்வமாக கட்சியின் பெயரை அறிவித்து விட்டார். மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி போல கமல் கட்சியிலும் திராவிடம் இல்லை. கட்சி சின்னத்தில் சிவப்பு, கறுப்பு வெள்ளை இடம் பெற்றுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்
அதிமுகவில் இருந்த டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். ஆர். கே நகரில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் தற்போது புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். அந்த அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று பெயர் வைத்துள்ளார். சசிகலாவின் ஆசியுடன், வாழ்த்துக்களுடன் அமைப்பின் பெயரை அறிவிப்பதாக கூறினார்.
கட்சிகொடியில் ஜெயலலிதா
அண்ணாவின் பெயரையும், கட்சிக்கொடியிலும் சேர்த்தார் எம்ஜிஆர். இப்போது ஜெயலலிதா உருவப் படத்தை கொடியிலும் கட்சி பெயரிலும் சேர்த்துள்ளார். அதிமுக தொண்டர்களை இந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கவருமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
ஆட்சியை பிடிக்குமா?
கட்சியில் திராவிடம் இல்லாத பாமக ஒரு ஜாதி கட்சியாகவே பார்க்கப்படுகிறது. விசிக, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு முன்னேற்றக்கழகம், மக்கள் நீதி மய்யம் என கட்சிகளின் பெயரிலும் திராவிடம் இல்லை. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே சார்ந்த கட்சியாக உள்ளது. தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் மக்கள் மனதில் இடம் பெறுமா? ஆர். கே நகரில் குக்கர் சின்னத்தில் வென்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்த டிடிவி தினகரன் முதல்வர் நாற்காலியில் அமர்வாரா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.