சென்னையில் மேலும் 4 மருத்துவமனைகளில் “அம்மா” உணவகங்கள்!
சென்னை: சென்னையில் மேலும் நான்கு அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்களைத் திறக்க மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகின்றது.
சென்னையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களும், உழைப்பாளர்களும் பயன் பெறும் வகையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
சுகாதாரமான முறையில் காலை உணவு, மதியம் உணவு, இரவு சப்பாத்தி என மூன்று வேளையும் குறைந்த விலையில் வயிறாற சாப்பிடக்கூடிய வாய்ப்பை அம்மா உணவகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
வரவேற்பு பெற்ற உணவகம்:
இதனால் இந்த உணவகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சி 200 வார்டுகளிலும் ஆரம்பிக்கப்பட்ட உணவகங்கள் பின்னர், அரசு மருத்துவமனைகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
ராஜீவ் காந்தி மருத்துவமனை:
மிகப் பெரிய அளவில் செயல்படக்கூடிய உணவகமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
பயனளிக்கும் உணவகம்:
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் புறநோயாளிகள், உள் நோயாளிகளை அருகில் இருந்த கவனிக்கும் உறவினர்களுக்கு இந்த உணவகம் மிகவும் பயன்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் நீண்ட வரிசையில் நின்று சாப்பாடு வாங்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை உணவகங்கள்:
இதே போல அரசு ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையை மையமாக வைத்து அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.
4 புதிய உணவகங்கள்:
இந்நிலையில் சென்னையில் உள்ள மேலும் 4 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்களை திறக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கட்டுமானப் பணிகள்:
ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, சேப்பாக்கம் கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் புதிதாக அம்மா உணவகங்கள் திறக்க இடம் தேர்வு செய்து கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.
விரைவில் திறப்பு விழா:
முதல்வர் ஜெயலலிதா இந்த 4 அம்மா உணவகங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க உள்ளார். சென்னையில் ஏற்கனவே 203 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
207 ஆக உயரும்:
இந்த நான்கு உணவகங்கள் திறக்கப்படும் போது இந்த எண்ணிக்கை 207 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.