ஜெ., உயிருடன் இருக்கும் போதே 20 லி. பால் கேட்ட சசி குடும்பம்- ராஜேந்திர பாலாஜி
ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போதே சசிகலா குடும்பத்தினர் 20 லிட்டர் பால் கேட்டனர் என்று பால்வளத்துறை அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக டிசம்பர் 4ஆம் தேதி எனக்கு போன் வந்தது என்றும் அப்பல்லோவிற்கு சென்ற போது சசிகலா குடும்பத்தினர் 20 லிட்டர் பால் ஏற்பாடு செய்யச் சொன்னதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி.
விருதுநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா இறந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியும், அதற்கு முதல்நாளும் சென்னை அப்பல்லோவில் நடந்த சம்பவங்களை விவரித்தார்.
செப்டம்பர் 21ஆம் தேதி ஜெயலலிதா பங்கேற்ற விழாவில் பங்கேற்றேன். அதன்பிறகு 22ஆம் தேதி அவர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவிற்கு குணமாகவேண்டும் என்று கோவில் கோவிலாக பிரார்த்தனை செய்து வந்தோம்.
செல்போனில் வந்த தகவல்
டிசம்பர் 4ஆம் தேதி மாலையே எனக்கு செல்போனில் தகவல் வந்தது. ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போன் வந்த உடன் உதவியாளர் பூங்குன்றனிடம் பேசினேன். அவர் அழுது கொண்டே பதில் சொன்ன உடன் பதற்றம் ஏற்பட்டது.
அப்பல்லோவில் எம்எல்ஏக்கள்
எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வரும்படி 4ஆம் தேதி நள்ளிரவே அதிமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வந்தது. எல்லோரும் அப்பல்லோவில் போய் காத்துக்கொண்டிருந்தோம். மருத்துவ ரீதியாக ஜெயலலிதா இறந்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.
20 லிட்டர் பால்
பால்வளத்துறை அமைச்சராக இருப்பதால் டிசம்பர் 5ஆம் தேதியன்று சசிகலா என்னிடம் 20 லிட்டர் பால் ஏற்பாடு செய்யுங்க என்று கூறினார். நான் காபி போடத்தான் கேட்கிறார்கள் என்று நினைத்தேன். பால் ஏற்பாடு செய்வதற்காக நான் சென்ற போதே ஜெயலலிதா இறந்து விட்டதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
சர்ச்சை கருத்து
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தனது கருத்தை திரும்ப பெற்றார். அதே போல ஒரு கருத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது ஜெயலலிதா மரணம் தேதி குறித்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.