அம்மா உணவகம்.. நல்லதா கெட்டதா… ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் சொல்வதென்ன?
அம்மா உணவகம் நல்லதா கெட்டதாக என்பது குறித்து ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஒன்இந்தியாவிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் அம்மா உணவகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
2014ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற உடன் ஜெயலலிதாவின் பதவி பறிபோனது. இதனை அடுத்து நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பிற்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா ஆர்.கே. நகரில் இடைத்தேர்தலை சந்தித்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
தற்போது, அவர் மரணம் அடைந்ததால் மீண்டும் அந்தத் தொகுதி காலியானது. இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட அம்மா உணவகம் குறித்து மக்களிடம் ஒன்இந்தியா கருத்து கேட்டது.
அப்போது, அந்தத் தொகுதியின் இளைஞர் ஒருவர், "இல்லாதப்பட்டவர்கள் கூட சாப்பிடுவதற்கு அம்மா உணவககம் உதவியாக இருக்கிறது. இதில் குறை எதுவும் சொல்ல முடியாது. 5 ரூபாய் வைத்திருப்பவர்கள் கூட இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லலாம்" என்று கூறினார்.
அதே போன்று, "இந்தத் திட்டம் நல்லத் திட்டம். யாரு வந்தாலும் சரி இந்தத் திட்டம் அப்படியே இருக்க வேண்டும். எனக்கு வேலை இல்லை. என்னிடம் இருக்கும் 50யை வைத்து சாப்பிட்டு செல்கிறேன்" என்று வேலையில்லாமல் இருக்கும் மற்றொருவர் கூறினார்.