அம்மா உணவகத்தை விளம்பரப்படுத்தும் அனிதா குப்புசாமி!
சென்னை: தமிழகத்தில் இனி ஏழைகள் உணவுக்காக கையேந்தும் நிலை இல்லை. அம்மா உணவகத்தில் 5 ரூபாயில் கம்பீரமாக சாப்பிடலாம் என்று அனிதா குப்புசாமி கூறினார்.
தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தின் சிறப்புக்களை எடுத்துக் கூறும் விளம்பரப்படத்தில் பிரபல பின்னணிப் பாடகி அனிதா குப்புசாமி நடித்துள்ளார்.
தமிழ்நாடு செய்தித்துறை சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருக்கும் அம்மா உணவகத்தின் முன்பு தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் செய்திப்பட படப்பிடிப்பு நடைபெற்றது. அம்மா உணவகத்தின் சிறப்பினையும், முக்கிய அம்சங்களையும் அனிதா குப்புசாமி விளக்கிக் கூறுவது போன்ற காட்சி பதிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா குப்புசாமி கூறியதாவது:
பசிப்பிணி
பசி தான் மிகவும் கொடுமையான நோய் ஆகும். ஒருநாளைக்கு சராசரியாக தனிமனிதனுக்கு உணவுக்கென ரூ.100 வரை செலவாகிறது. உணவுக்காக கையேந்தி நிற்கும் பல மனிதர்களை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இனி அந்த நிலைமை ஏற்பட போவதில்லை. உணவுக்காக இனி கையேந்தும் நிலை தமிழகத்துக்கு இல்லை.
பசி போக்கும் அம்மா
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஏழைகளின் பசியை போக்குவதற்காக அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ரூ.1-க்கு இட்லி கிடைக்கிறது. ரூ.5-க்கு சாம்பார் சாதம் மற்றும் கறிவேப்பிலைசாதம் கிடைக்கிறது. 10 ரூபாய் இருந்தால் போதும் காலை, மதியம் என 2 வேளை ஒருவர் வயிறார சாப்பிடலாம். உலகம் இயங்குவதே வயிற்றுக்காக தான்.
கம்பீரமாக சாப்பிடலாம்
சொந்த பணத்தில் அம்மா உணவகத்தில் கம்பீரமாக சாப்பிடலாம். யாரும் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்மா உணவகத்தில் கறிவேப்பிலை சாதம் சாப்பிட்டேன். இது உண்மையிலேயே சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
நல்ல ருசி
கறிவேப்பிலை, புளி, உளுந்தம்பருப்பு என சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் துவரம்பருப்பு, கடலைபருப்பு போன்றவற்றை பொடியாக அரைத்து இந்த சாதத்தில் சேர்த்து இருக்கிறார்கள்.
வயிறும் மனமும் நிறையும்
இந்த உணவு வைட்டமின் சத்துக்கள் அடங்கிய உணவாகவும் இருக்கிறது. பசியோடு இங்கு வரும் மக்கள் வயிறும், மனதும் நிறைந்து வெளியே செல்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது என்றார் அனிதா குப்புசாமி
இவர் சமீபத்தில்தான் அதிமுகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.