அம்மன் கழுத்திலிருந்து இறங்கிய தாலி... எமனை விரட்ட வீட்டு வாசலில் விளக்கேற்றும் பெண்கள்
சென்னை: பிரபல கோவில்களில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி இறங்கியதாக பரவிய வதந்தியால், கணவருக்கு ஆகாது என்று அச்சப்பட்ட பெண்கள் தங்களின் வீட்டு வாசல்களில் விளக்கேற்றி பரிகாரம் செய்துள்ளனர். பச்சை புடவை, மஞ்சள் புடவை, சிவப்பு புடவை என்று வதந்தி கிளப்பியவர்கள் இப்போது அம்மன் கழுத்தில் உள்ள தாலி இறங்கியதாக கிளப்பி விட்டு விட்டனர்.
சும்மாவே தீயாக பரவும் வதந்தி வாட்ஸ் புண்ணியத்தால் வரைமுறை இல்லாமல் பரவியது. மழையால் கார்த்திகை திருநாளில் அகல்விளக்கு ஏற்றாதவர்கள் கூட கணவரின் உயிருக்கு ஆபத்து என்று பரவிய தகவலைக் கேட்டு வீட்டு வாசல்களில் விளக்கேற்றி வழிபட்டனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி மெதுவாக மீண்டு வரும் நிலையில் திண்டுக்கல்லில் அம்மன் கழுத்தில் இருந்து தாலி இறங்கியதாக தகவல் பரவியது. தொடர்ந்து தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், சேலம் பெரிய அம்மன் கோவில், சென்னை வடிவுடையம்மன் கோவில்களில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி இறங்கியதாகவும், தாலி அறுந்து விழுந்ததாகவும், விஷமிகள் சிலர் வதந்தியை கிளப்பினர்.
விளக்கேற்றி வழிபாடு
சென்னை முழுவதும் வதந்தி பரவியது. அச்சமடைந்த பெண்கள், தங்கள் மாங்கல்யம் காப்பதற்காக, வீட்டு வாசலில் விளக்கேற்றி பரிகாரம் செய்தனர். வெள்ள பாதிப்பு முடிந்த உடன் இரு தினங்களவே ராயபுரம் கிரேஸ் கார்டனில் பெண்கள், வீட்டு வாசலில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.
வீட்டுக்கு வீடு விளக்கு
தாலி இறங்கிய தகவல் பரவிய உடனே திண்டுக்கல் நகரில் வீட்டுக்கு வீடு மீண்டும் விளக்கேற்ற ஆரம்பித்து விட்டனர். ஒருவேளை மழையால் விற்பனையாகமல் இருந்த அகல் விளக்குகளை விற்பதற்காக யாரேனும் வதந்தி கிளப்பிவிட்டிருப்பார்களோ என்றும் யோசிக்கத் தோன்றியது.
சகோதரிக்கு பச்சை புடவை
ஏழெட்டு வருடங்களுக்கு முன், இப்படித்தான் சகோதரிகளுக்கு பச்சை சேலைஎடுத்துக் கொடுக்க வேண்டுமென ஒரு வதந்தி பரவி, எங்கும் பசுமை பூத்தது. `நல்லதங்காள்குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட ஆண்டு அதனால் அண்ணன்களுக்கு ஆபத்து என்று காரணமும் சொன்னார்கள்.
அண்ணிக்கு சிவப்பு புடவை
மாமியார் மருமகளுக்கு மஞ்சள்சேலை எடுத்துக் கொடுக்க வேண்டுமென்றதால் எங்கும் மங்களகரமான மஞ்சள் நிறைந்தது. பிறகு அண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை எடுத்து தரவேண்டும் என்று கிளப்பிவிட்டனர்.
எமனை விரட்ட விளக்கு
சேலத்தில் இப்படித்தான் வாட்ஸ் அப்பில் ஒரு வதந்தி பரவியது. அதாவது எமதர்மன் சேலத்திற்கு வருவது உறுதி... உங்களையும், உறவுகளையும் காத்துக்கொள்ளுங்கள் என்று பரவிய தகவலைப் பார்த்து வீட்டு வீட்டுக்கு விளக்கேற்றினர். ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை விளக்குகளை ஏற்றினர் சேலம் பெண்கள்.
வாட்ஸ் அப் வதந்திகள்
முன்பெல்லாம் வாய் மூலம் பரவிய வதந்திகள் இப்போது வாட்ஸ் அப் மூலம் பரவி வருகின்றன. அது உண்மையா, வதந்தியா என்பதை கண்டறிய தொழில் நுட்பம் கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.