சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் திறப்பு
சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகத்தை டி.டி.வி தினகரன் திறந்து வைத்து கொடியேற்றினார்.
சென்னை : அமமுக சார்பில் நாங்கள் விரைவில் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னையில் திறந்துவைத்து உரையாற்றினார்.
சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அதை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கொடியேற்றி திறந்துவைத்தார்.
அப்போது அங்கிருந்த தொண்டர்களிடம் அவர் பேசுகையில், அசோக் நகர் அலுவலகம் இனி அமமுகவின் தலைமை அலுவலகமாகத் திகழும். இனி தமிழகத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும், நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
அமமுகவிற்கு அலுவலகம் அமைக்க சென்னையில் யாருமே இடம் தராத போது, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா இடம் கொடுத்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அதிமுகவின் 70% தொண்டர்கள் அமமுகவிற்கே ஆதரவாக உள்ளனர். விரைவில் அசோக் நகரில் இருந்து ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று அமமுக கொடியேற்றும். அம்மாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான் என்பதை விரைவில் நிரூபிப்போம் என்றார்.