அப்பல்லோ மருத்துவமனைக்கு பெங்களூர் அம்ருதா நோட்டீஸ்
அப்பல்லோ மருத்துவமனைக்கு பெங்களூர் அம்ருதா தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் உள்ளனவா என கேட்டு அவரது மகள் என உரிமை கோரும் பெங்களூர் அம்ருதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மகள் என கூறி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கும், தனது தாய்க்கும் மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தனது தாயின் உடலை தோண்டி எடுத்து வைணவ சம்பிரதாயப்படி சடங்குகள் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அடிப்படை ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அதை தள்ளுபடி செய்தனர். மேலும் அம்ருதா இந்த வழக்கை உரிய ஆதாரங்களை கொண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அம்ருதா சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள கூடாது என்றெல்லாம் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பினார்.
இந்நிலையில் அம்ருதா தனது வழக்கறிஞர் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் இருக்கின்றனவா என்று கேட்டுள்ளார். மேலும் அவை இருந்தால் டிஎன்ஏ சோதனைக்காக பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும் என்றும் அம்ருதா கோரிக்கை விடுத்துள்ளார்.