இதுவரை 35 பேரின் உயிரை குடித்த ஏ.என்.32 ரக விமான விபத்துகள்
சென்னை: ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏ.என்.-32 ரக ராணுவ சரக்கு விமானம் மாயமாகியுள்ளது. முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு இதே ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு கிளம்பிய விமானப்படை விமானம் ஏ.என்.-32 மாயமாகியுள்ளது. விமானம் கடலில் விழுந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து விமானத்தை வங்கக் கடலில் தேடும் பணி நடந்து வருகிறது.
ஏ.என்.-32 விமானம்
இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களிலேயே ஏ.என்.-32 ரக விமானம் தான் மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. தற்போது விமானப்படையில் சுமார் 100 ஏ.என்.-32 ரக விமானங்கள் உள்ளன.
ரஷ்யா
125 ஏ.என்.-32 ரக விமானங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டன. இரண்டு என்ஜின்கள் அடங்கிய இந்த ரக விமானம் மோசமான வானிலையிலும் தடுமாறாமல் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
அருணாச்சல பிரதேசம்
முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் ஏ.என்.-32 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 13 பேரும் பலியாகினர். என்ஜின் கோளாறால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
டெல்லி
அருணாச்சல பிரதேச விபத்திற்கு முன்னதாக 1999ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி அருகே ஏ.என்.-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 22 பேர் பலியாகினர்.