டிஎஸ்பி. விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? வீட்டிற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு
கடலூர் : திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு காரணம் என்ன என்று அவரது வீட்டிற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய விஷ்ணுபிரியா கடந்த 18-ம் தேதியன்று அங்குள்ள முகாம் அலுவலக குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுதொடர்பாக கண்காணிப்பாளர் நாகஜோதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாழக்கிழமையன்று நாகஜோதி தனது குழுவினருடன் கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியா வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவரது தாயார் கலைச்செல்வி, தங்கை திவ்யா ஆகியோரிடம் விஷ்ணுபிரியாவின் குணநலன்கள் குறித்த கேள்விகளை கேட்டுள்ளனர். விசாரணையை முழுமையாக முடிக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திரும்பிச் சென்றனர். அவரது தந்தை ரவியிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இந்நிலையில், இன்று காலையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா பெயரில் சேலத்தில் முத்திரையிடப்பட்ட பெயர், விலாசம் இல்லாத கடிதம் வந்தது. அதனை உறவினர்கள் பெற்று படித்ததில் அதிர்ச்சியடைந்தனர்.
அக்கடிதத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரோடு செயல்படும் சில சாதிவெறி பிடித்த காவலர்களும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும் விஷ்ணுபிரியாவை பாலியல்பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம். எனவே, மறு உடற்கூறு பரிசோதனை வேண்டுமென அரசை வலியுறுத்துங்கள் என்று கூறப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி மேலும் சில சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். விஷ்ணுபிரியா இறப்பிற்கு 20 நாள்களுக்கு முன்பிலிருந்தே சில நபர்கள் வீட்டினை நோட்டம் விட்டு வந்தனர். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்டதற்கு சரியான பதில் அளிக்காமல் சென்று விட்டனர்.
விஷ்ணுபிரியா இறந்த 18 ஆம் தேதி பகல் 2.38 மணியிலிருந்து 5 மணி வரையில் அவரது செல்போனில் நடந்த உரையாடலை கைப்பற்றி விசாரித்தாலே இறப்பிற்கான காரணம் தெரிந்து விடும். அவர் தான் விசாரித்து வந்த கொலை வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தியுள்ளார். அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.
மேலும், திருச்செங்கோடு பகுதியில் 1 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக தடுத்ததாலும் இவர் மீது பலர் ஆத்திரத்தில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே, இதில் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸார் எனது மகள் எழுதியதாகக் கூறப்படும் 9 பக்க கடிதத்தை காண்பித்தும், சில புகைப்படங்களையும் காண்பித்து விளக்கம் கேட்டனர். அதில், 2 பக்கம் மட்டுமே விஷ்ணுபிரியாவின் கையெழுத்து மற்றவை அவரது கையெழுத்து இல்லை என்று கூறிவிட்டோம் என்றும் ரவி கூறினார்.