திருச்சி விமான நிலையத்தில் ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயற்சி- பெரும் பதற்றம்!
திருச்சி விமான நிலையத்தில் ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கத்தியால் கத்த முயற்சித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயன்ற சோலைராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக இணைப்பு முயற்சிகள் கேள்விக்குறியான நிலையில் எடப்பாடி, தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி ஆகியோருடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரே விமானத்தில் திருச்சி வந்தடைந்தனர். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிமுக தொண்டர்களை விலக்கிக் கொண்டு ஓபிஎஸ்ஸை நோக்கி ஒருவர் வேகமாக நகர்ந்து வந்தார். அந்த நபர் மீது சந்தேகமடைந்த அதிமுக தொண்டர்கள் தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் சுட்டிக்காட்டினர்.
ஓபிஎஸ்ஸை நெருங்க முயன்ற நபரை தொழிலகப் பாதுகாப்பு படையினர் மடக்கினர். அப்போது அவரது கையில் கத்தி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயற்சித்ததால் ஆத்திரம் அடைந்த அதிமுக தொண்டர்கள் அந்த நபரை சராமரியாகத் தாக்கினர்.
பின்னர் தொழிலக பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயன்றவர் சோலைராஜன் என போலீசார் தெரிவித்தனர்.