கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் படுகொலை.. காவிரியாற்றில் சடலம்.. உறவினர்கள் தர்ணா
Recommended Video
கும்பகோணம்:கும்பகோணம் அருகே 5 லட்ச ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் தற்போது துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மும்தசிர் (வயது 19). மயிலாடுதுறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று தனது மோட்டார் சைக்கிளில் திருமங்கலக்குடியில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்வதாக சொல்லி புறப்பட்டுள்ளார். இரவு 8 அரைமணியளவில் தன்னை யாரோ கடத்தி விட்டதாகவும் 5 லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக கோவைக்கு வந்து தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதன்பிறகு செல்போன் அணைக்கப்பட்டுள்ளது.
சடலம் கண்டுபிடிப்பு
அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மும்தசீரை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை திருபுவனம் அருகே காவிரி ஆற்றங்கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, மும்தசீரின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அடையாளம் காணப்பட்ட சடலம்
அப்போது அந்த ஆண் சடலம், கடத்தப்பட்டதாக கூறப்படும் மும்தசீர் என்பது தெரிய வந்தது. அவரது உறவினர்களை அழைத்து, மும்தசீரின் உடல் அடையாளமும் காட்டப்பட்டது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
மருத்துவமனை முன்பு தர்ணா
கொலை சம்பவம் குறித்து அறிந்த உறவினர்களும்,ஊர் மக்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது அவர்கள் அங்கு திரண்டனர். இதுபோன்ற ஏற்கனவே சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
கைது செய்ய வலியுறுத்தல்
குற்றவாளிகளை கைது செய்தால்தான் மும்தசிர் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றுக் கொள்வதாக அவரது உறவினர்களும், ஊர் பொதுமக்களும் கூறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மும்தசீரின் உறவினர்களையும், பொதுமக்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
தனிப்படைகள் விசாரணை
பின்னர், கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறினார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒப்படைக்கப்பட்ட உடல்
அதன் பின்னர் கல்லூரி மாணவர் மும்தசிரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.