சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் கவலைக்கிடம்.. தீவிர சிகிச்சை
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
இவர்கள் நான்கு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ராக்கெட் வெடிகளுக்கான ரசாயன மருந்து செலுத்தும் பணியும் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரசாயனம் மருந்துகளை பயன்படுத்தும்போது திடீரென தீ பிடித்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த வீரர்கள், ரசாயன மருந்துகளால் கொழுந்துவிட்டு எரிந்த தீயினை போராடி அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் ஊழியர்கள் ராமசாமி, முருகேசன், அழகுபாண்டி, மாரிபாண்டி ஆகிய 4 பேரையும் கருகிய நிலையில் மீட்டு சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து போலீசார் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.