'பகவான்'கள் நடமாடும் இடத்தில் 'முருகேசன்'களும் உலா வருவது வேதனை.. வெட்கக்கேடு!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜபாளையம்: முன்னே பின்னே தெரியாதவர்களை கூட நம்பிடலாம். ஆனால் கூடவே இருப்பவர்களை எப்படி நம்புவது என்றே தெரியவில்லை. அதிலும் பயிரை மேயும் வேலிகள்தான் நாட்டில் நிறைய தலைதூக்கியுள்ளன. அப்படி, பல பயிர்களை காக்கவேண்டிய ஒரு வேலியின் மட்டரகமான, கீழ்த்தரமான செய்திதான் இது.
ராஜபாளையம் அருகே உள்ளது திருவள்ளுவர் நகர். அங்கே அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் கிட்டத்தட்ட 300 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு 6 ஆசிரியைகள், 9 ஆசிரியர்களும் உண்டு. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பெயர் முருகேசன்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த மாணவிகள் அனைவரும் திடீரென பள்ளிவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆபாசமாக படம் பிடித்தார்
அப்போது அவர்கள் சொன்ன புகார், பள்ளி தலைமை ஆசிரியர் தங்களை அளவுக்கு மீறி பாலியல் தொல்லை செய்கிறார் என்பதுதான். இது பல நாட்களாகவே நடந்து வந்திருக்கிறது. நேற்றுமுன்தினமும் 9-ம் வகுப்பு மாணவியை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து கொண்டு மிரட்ட தொடங்கியுள்ளார் இந்த தலைமை ஆசிரியர். நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகமானதால்தான், மாணவிகள் குமுறி வெடித்து போராட்டத்தில் இறங்கினர்.
பள்ளி முதல்வரிடம் விசாரணை
கூடவே இந்த முற்றுகையில் மாணவிகளின் பெற்றோரும் ஒன்றுசேர்ந்தனர். தங்களை இவ்வளவு நாளும் பாலியல் தொல்லை கொடுத்தும், மிரட்டியும் வந்த இதுபோன்ற பள்ளி முதல்வர் தங்களுக்கு தேவையே இல்லை எனவும் முழக்கமிட்டனர். தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர், வட்டாட்சியர், காவல்துறையினர் என ஒருவர்விடாமல் பள்ளி முன்பு ஆஜராகிவிட்டனர். தலைமை ஆசிரியரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.
போக்சோவில் கைது
ஆனால் உடனே பள்ளி முதல்வரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நின்று சாலை மறியலில் ஈடுபட தொடங்கிவிட்டனர். அன்று விடிய விடிய தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே மாணவி ஒருவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜபாளையம் அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்றிரவு போக்சோவில் ஒருவழியாக பள்ளி முதல்வரை கைது செய்துள்ளனர்.
அசிங்கப்பட்டு போவீர்கள்
பகவான் போன்ற நல்ல உள்ளம் எண்ணற்ற ஆசிரியர்கள் நடமாடும் இந்த மாநிலத்தில் முருகேசன் போன்றோரை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தற்போதுள்ள பிள்ளைகள் எதற்கும் துணிந்தவர்கள், யாருக்கும் பயப்படாமல் தங்கள் கருத்துக்களை சொல்பவர்கள். தவறு என்றால் வெடித்து சீறுபவர்கள். எனவே மாணவர்களை, மாணவிகளை சாதாரணமாக எடைபோட்டு காம லீலைகளை யார் தொடர்ந்தாலும், கடைசியில் அசிங்கப்பட போவது நீங்களாகத்தான் இருக்கும்.