வங்கி ஊழியை தவறவிட்ட லேப்டாப்பை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
சென்னை: சென்னையில் வங்கியில் வேலை செய்யும் பெண் அதிகாரி தவறவிட்ட லேப்டாப்பை ஆட்டோ டிரைவர் ஒருவர் நேர்மையாக போலீசில் ஒப்படைத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக இருப்பவர் ஜெயகீதா(48). அவரது கணவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்கிறார். கீதா தனது கணவருடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரிசர்வ் வங்கி ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கீதா புதன்கிழமை இரவு பணி முடிந்து ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது லேப்டாப்பை ஆட்டோவில் தவறவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகே அவருக்கு தனது லேப்டாப்பை ஆட்டோவில் விட்டது நினைவுக்கு வந்தது.
இதையடுத்து அவர் இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே அந்த ஆட்டோ டிரைவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு சென்று கீதாவின் லேப்டாப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் கொடுத்துவிடுமாறு கூறினார்.
லேப்டாப் வியாழக்கிழமை கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. லேப்டாப்பை பொறுப்புடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.