தஞ்சாவூர் அருகே பணம் எடுக்க வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம்
வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த
தஞ்சாவூர்: கடந்த நவம்பர் 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதுமுதல் கடந்த 25 நாட்களாக வங்கி வாசல்களிலும் ஏடிஎம் வாசல்களிலும் செல்லாத நோட்டுக்களை மாற்றவும், பணத்தை டெபாசிட் செய்யவும், ஏடிஎம்களில் உள்ள பணத்தை எடுக்கவும் வரிசையில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருக்க நேரிடுகிறது.
வங்கி வாசலில் பணம் எடுக்க காத்திருப்பவர்களில் பலர் மயக்கமடைகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். செல்லாத நோட்டு அறிவிப்புக்குப் பின்னர் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பணப்பஞ்சம் இன்னமும் தீர்ந்தபாடில்லை. அரசு, தனியார் ஊழியர்கள், ஓய்வூதியம் எடுப்பவர்கள், 100 நாள் வேலை செய்பவர்கள், முதியோர் பென்சன் பெறுபவர்கள் என பலரும் வங்கியைத் தேடி வந்து வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணம் எடுக்க வந்த முதியவர் பணம் எடுத்த பின் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த சுப்ரமணியன் பாபநாசம் அருகே உள்ள வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். சுப்ரமணியன் மரணம் பற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சுப்ரமணியனைப் பார்த்து கதறி அழுதனர்.
இந்த ரூபாய் நோட்டு பிரச்சினை என்று தீரும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் சம்பாதித்து வங்கியில் போட்டிருக்கும் பணத்தை எடுக்க இப்படி அலைய வேண்டியிருக்கிறதே என்று குற்றம் சாட்டியுள்ளனர். பணத்திற்காக இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறதோ?