ஊட்டியில் பயங்கர மழை.. இடி தாக்கி 100-வருட பழமையான மரம் எரிந்து கருகியது
ஊட்டியில் இடி தாக்கி மரம் எரிந்து சாம்பலானது.
ஊட்டி: ஊட்டியில் மின்னல் தாக்கியதில் பழமையான மரம் ஒன்று தீ பிடித்து எரிந்தது.
நீலகிரியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கொட்டி வரும் கனமழையால் நிறைய இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மரங்கள் வேரோடு பொத் பொத்தென்று சாய்ந்து சாலைகளில் விழுகின்றன.
[மூச்சு விட முடியலை போலீஸ்கார்.. அதான் கத்தியை எடுத்து.. பரபரக்க வைத்த ரஷ்யாக்காரர்!]
பனிமூட்டம்
இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிறைய வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களை ஓட்டி செல்வது சிரமமாக உள்ளது.
மரத்தில் இடி விழுந்தது
இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டது. அதில் தாவரவியல் பூங்காவில் இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மரம் ஒன்றில் இடி விழுந்தது.
புகை மண்டலம்
இதனால் அந்த மரம் குப்பென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
கருகிய மரம்
ஆனாலும் அந்த மரம் முழுவதுமாக எரிந்து கருகியது. பழமை வாய்ந்ததாக சொல்லப்படும் அந்த மரம் சற்று தனித்து இருந்ததால் பாதிப்பு அந்த மரத்தோடு போனது. இல்லையென்றால் தாவரவியல் பூங்காவில் இருக்கும் பெரும்பாலான பழமை வாய்ந்த மரங்களும் பற்றி எரிந்திருக்கும்.