அன்புள்ள அம்மா, உங்களால் மட்டுமே மது விலக்கை அமல்படுத்த முடியும்.. ஒரு தமிழனின் திறந்த மடல்!
- ராமநாதன் மெய்யப்பன்
சென்னை: உங்களால் மட்டுமே மது விலக்கை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த முடியும். உங்களால் முடியாவிட்டால் யாராலும் இதைச் செய்ய முடியாது. எனவே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இதை நீங்கள் அமல்படுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒருவர் திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ராமநாதன் மெய்யப்பன் என்கிற அவர் இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தனது கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்...
அன்புள்ள அம்மா,
1. ஐயா சசிபெருமாள் தனது வாழ்வை தவறான தன்னுடைய முடிவால் மாய்த்துக் கொண்டார்... எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றன என்பது சில பலருக்குப் புரிந்து தான் இருக்கிறது... ஆனால் இவ்வளவு பூதாகாரமாகப் பேசப்படும் விஷயத்தில் அரசின் மயான அமைதி நல்லதல்ல...
2. அந்த மனிதரின் இத்தனை நாள் போராட்டங்களுக்கு மதிப்பளித்தாவது, ஒரு அடையாளத்துக்காகவது, காலை அரை மணி நேரம் மாலை அரை மணி நேரம் மதுக்கடைகளின் நேரத்தைக் குறைத்துவிட்டு, மதுவிலக்குக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஆறு மாதங்களில் முடிவெடுக்கிறோம் என்று சொல்லலாமே? எது தடுக்கிறது?
3. மதுவினால் வரும் வருமானத்தை வைத்து நலத்திட்டம் எனும் பெயரில் இலவசம் கொடுப்பதால் பல பேரின் வாழ்க்கையை அடகு வைத்தல்லவா சிலரின் சில நிமிட புன்னகையை விலைக்கு வாங்குகிறீர்கள்? இது உங்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லையா அல்லது தெரிந்திருந்தும் தெரியாதது போல் அமைதி காக்கிறீர்களா?
4. கள்ளச் சாராயத்தையும் விஷச் சாராயத்தையும் ஒழிக்க வழிமுறைகள் இல்லையா அல்லது மனம் வரவில்லையா? வீரப்பனை ஒழித்து வீராணத்தை சாத்தியப்படுத்திய உங்களுக்கு இது எம்மாத்திரம்?
5. நத்தம் விஸ்வநாதன் மதுவிலக்கு சம்மந்தமாக இதுவரை ஒரு அமைச்சராக என்ன செய்தார் என்ற மதிப்பீடு உண்டா? இது தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா (எதிர்க் கட்சிகளுக்காகவும் ஊடகங்களுக்காகவும் கேட்கவில்லை)?
6. மதுவிலக்கு தொடர்பாகவும் அதன் தீமை தொடர்பாகவும் தாங்கள் முதல்முறை முதல்வராக இருந்த போது தமிழ் பாடப்புத்தகத்தில் தாங்கள் ஒரு பாடம் எழுதி அதனை நாங்கள் படித்த ஞாபகம் உண்டு... மற்றவர்கள் எழுதுவதற்கும் செயலாற்றுவதற்கும் வேறுபாடு இருக்கிறது என்று குறைபட்டுக் கொள்ளும் நீங்கள், அந்தப் பாடத்தை மறுபடி படித்துப் பார்த்து இந்த விஷயத்தில் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டால் லட்சோப லட்சம் குடும்பங்களில் விளக்கேற்றியதாக ஆகும்... லாட்டரியை ஒழித்து நீங்கள் செய்ததை இந்த விஷயத்திலும் செய்யலாம் - நீங்கள் மட்டும் தான் செய்யமுடியும் - என்பது லட்சோப லட்சம் தாய்மார்களின் கருத்து...
7. முல்லை பெரியாறு, காவிரி ஆகிய விஷயத்தில் - நமக்கு நீர் கிடைக்கிறதோ இல்லையோ - நமது மாநிலத்தின் சட்ட உரிமையை நிலை நாட்ட தங்களது உறுதியான திடமான நிலைப்பாடே காரணம் (யார் என்ன அரசியல் செய்தாலும், இந்த விஷயம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது)... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையிலிருந்து கைதிகளை காக்கும் சட்ட போராட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது என்பதையும் இங்கே நினைவு கூற விரும்புகிறேன்...
8. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டையும் கொள்கையையும் மாற்றிக் கொண்டு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு துணிச்சல், கொள்கையை வாக்கு வங்கி சார்ந்த விஷயமாக மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தலைவர்கள் மத்தியில், மிகுந்த பாராட்டுக்குரியது என்பது நடுநிலையாளர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை... அதே பாணியைக் கையாண்டு வரலாற்று சிறப்புமிக்க மதுவிலக்கு விஷயத்திலும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி அமல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு... அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதைப் பற்றி சற்றே சிந்தியுங்கள்...
9. ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தைத் தேர்தலை மனதில் வைத்துத் தொடுவது கூட எவ்வளவு சிரமம் என்பது இதற்கு முன்னர் ஆண்டவர்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் நன்கு தெரியும்... இருந்தாலும், இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை இந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்திலாவது எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்... ஏமாற்றி விடாதீர்கள்...
10. இந்த முடிவை நீங்கள் எடுத்தால், நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து இதனை சிறப்பாக நடைமுறைப்படுத்த வாய்ப்பாக அமையும்... ஒரு வேளை இதனை நீங்கள் தொடாமல் இந்தக் காரணத்துக்காகவோ வேறு காரணங்களுக்காகவோ ஆட்சியை இழக்க நேரிட்டால், இன்றளவில் வேறு யாராலும் இதனை திறம்பட செய்து காட்ட முடியாது... அந்த வகையில் வரலாறு தங்களுக்கு நல்கும் இந்த அறுமையான வாய்ப்பை இழந்து விடாதீர்கள்...
இவண்...
தங்களது கனிவான பரிசீலனைக்கு இந்த மடல் சார்ந்த விவரங்களும் வரும் என நம்பும், சக தமிழர்கள் நலனை விரும்பும்...
ஒரு நலன் விரும்பி...