ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஆளும் கட்சியை முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவித்து தி.மு.க. அதிரடி!!
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக என். ஆனந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மறுநாளே முதல் கட்சியாக வேட்பாளரை அறிவித்து ஆளும் அண்ணா தி.மு.க அதிர வைத்துள்ளது தி.மு.க.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு 4ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் முதல்வர் பதவியும் பறிபோனது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருந்தது. இந்த தொகுதியில் பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் 16-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் அதிரடியாக தி.மு.க. முதல் கட்சியாக தமது வேட்பாளரை அறிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த என். ஆனந்த் இம்முறையும் வேட்பாளர் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
பொதுவாக ஆளும் அண்ணா தி.மு.க.தான் இப்படி அதிரடியாக முதலில் வேட்பாளரை அறிவிக்கும். ஆனால் இம்முறை ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே வேட்பாளரை தி.மு.க. அறிவித்துள்ளது.
இதனால் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் தொடக்கமே அமர்க்களமாகிவிட்டது.
2011ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் விவரம்:
ஜெ. ஜெயலலிதா (அண்ணா தி.மு.க) : 1,05,328
என். ஆனந்த் ( தி.மு.க) 63, 480
மொத்தம் 41, 848 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.