திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்ம நோயால் பலி: அன்புமணி கவலை
திருவண்ணாமலையில் மர்மநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்ம நோயால் உயிரிழந்தது கவலை அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் 25 நாட்கள் இடைவெளியில் மர்ம நோயால் உயிரிழந்திருப்பது கவலையளிக்கிறது. இதனால் அக்கிராமத்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கான காரணம் கூட கண்டறியப்படாதது கண்டிக்கத்தக்கது.
திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ள தண்டரை காலனியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் குடும்பம் தான் இந்த சோகத்துக்கு ஆளாகியிருக்கிறது.
அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆரோக்கியதாஸின் சகோதரி மகனான கிறிஸ்டோபர் என்ற 13 வயது சிறுவன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து 9-ஆம் தேதி வினோத்குமார் என்ற 23 வயது இளைஞரும், 10-ஆம் தேதி ஆரோக்கியதாசின் 7 வயது மகன் நெல்சனும், 23-ஆம் தேதி கிருத்திகா மெர்லின் என்ற சிறுமியும், 24-ஆம் தேதி ஜோசப் என்ற 85 வயது முதியவரும் உயிரிழந்தனர்.
ஆரோக்கியதாஸின் தாயார் கிறிஸ்தா கடந்த 31-ஆம் தேதி உயிரிழந்திருக்கிறார். இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு, அடுத்த ஓரிரு மணிகளில் தொடங்கி ஓரிரு நாட்களில் உயிரிழந்துள்ளனர். அனைவருக்குமே முதலில் வயிற்று வலியும், பின்னர் வாந்தியும் ஏற்பட்டு, மருத்துவம் பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆரோக்கியதாஸ் குடும்பத்துடன் பெங்களூருவில் வாழ்ந்து வருகிறார். கிறிஸ்டோபரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவருடன் வந்த அவரது மகன் நெல்சன் அடுத்த இரு நாட்களில் உயிரிழந்துள்ளார். அதேபோல், ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து வந்த மெர்லின் அடுத்த நாளே இறந்திருக்கிறார்.
இவர்கள் தவிர அதே ஊரைச் சேர்ந்த அமுதா, முனுசாமி ஆகியோரும் இந்த காலத்தில் இறந்துள்ளனர். அடுத்தடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகளால் தண்டரை காலனி சோகத்தில் மூழ்கியுள்ளது. தீபாவளி திருநாள் கூட அங்கு கொண்டாடப்படவில்லை. அந்த ஊரைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு தற்காலிகமாக வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் அக்கிராமத்தில் சோகமான அமைதி நிலவுகிறது.
மருத்துவக் குழுவினர் தண்டரை காலனிக்கு சென்று மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும், உயிரிழப்புகளுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அக்கிராமத்திற்கு சற்றும் தொடர்பில்லாத சிறுவனும், சிறுமியும் அங்கு சென்ற 24 மணி முதல் 48 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர் என்றால், அதற்கு காரணமானது மிகக் கொடிய நோயாகத் தான் இருக்க வேண்டும்.
மருத்துவத்துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் நிலையில், 8 பேரின் உயிரைக் குடித்த கொடிய நோயை கண்டறிய முடியாமல் மருத்துவத்துறை தடுமாறிக் கொண்டிருப்பது மிகப்பெரிய அவலம் ஆகும்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மருத்துவ வல்லுநர்கள் குழுவை தண்டரை காலனிக்கு அனுப்பி, உயிரிழப்புக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.