தைலாபுரத்தில் விஜயகாந்த் பிரேமலதாவுக்கு தடபுடல் விருந்து: அன்புமணி அழைப்பு
சென்னை: உடல் நிலையை காரணம் காட்டி தோட்டத்தில் ஓய்வெடுக்கும் ராமதாஸை சமாதானப்படுத்த விஜயகாந்த், பிரேமலதா ஆகியோருக்கு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளாராம் அன்புமணி ராமதாஸ்.
தைலாபுரம் தோட்டத்தில் இந்த விருந்து நடைபெற உள்ளது. அப்போது ராமதாஸ் - விஜயகாந்த் இடையே சமரச முயற்சிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார் அன்புமணி.
விருந்து அழைப்பினை விஜயகாந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், விழுப்புரம் வரும்போது தைலாபுரம் வருவதற்கு விஜயகாந்த் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் இருந்தாலும் வடக்கும் தெற்குமாகத்தான் திரும்பிக்கொண்டுள்ளனர் பாமக ராமதாசும், தேமுதிக விஜயகாந்தும்.
லோக்சபா தேர்தலில் ஒரு கட்சி யின் வெற்றிக்கு, மற்றொரு கட்சி யின் ஆதரவு அவசியம் என்பதை, இவ்விரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் உணர்ந்து உள்ளனர்.
விரும்பாத ராமதாஸ்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஆரம்பம் முதலே தே.மு.தி.க.,வுடன் அமைக்கப்பட்ட கூட்டணியை விரும்பாமல், வேண்டா வெறுப்பாக உள்ளார்.
தைலாபுரத்தில் ரெஸ்ட்
தர்மபுரியில் மகனை வேட்பாளராக அறிமுகப்படுத்தியதற்குப் பின் தேர்தல் பிரசார லைம்லைட்டிற்குள்ளேயே வரவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு பின், திண்டிவனம் அருகே, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள, தன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
சமாதானமான விஜயகாந்த்
ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி கட்சியினரின் தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். பா.ம.க.,வுக்கு ஆதரவாகவும் அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
ராமதாஸ் வருவாரா?
அதேபோல, ராமதாசும், வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான, குரு உள்ளிட்ட, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என, தே.மு.தி.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, 'அவர்கள் இருவரையும் நிச்சயம் பிரசாரத்திற்கு அழைத்து வருவேன்' என, பா.ம.க., இளைஞ ரணி செயலர் அன்புமணி உறுதி அளித்தார்.
அறிகுறியே இல்லை
வேட்புமனு தாக்கல் துவங்கி, தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையிலும், ராமதாசும், குருவும், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்வதற்கான, எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை.
தேமுதிக ஜெயிக்கணுமே
வடமாவட்டங்களில் பாமக தலைவர்கள் வாக்கு சேகரித்தால் மட்டுமே தேமுதிக வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விருந்துக்கு வாங்களேன்
முறுக்கிக் கொண்டுள்ள ராமதாஸை சமாதானப்படுத்தும் வகையில் விஜயகாந்தையும் பிரேமலதாவையும் வீட்டுக்கு வரவழைத்து விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
வைகோவின் விருந்து
திருநெல்வேலி மற்றும் விருதுநகர் தொகுதியில் பிரசாரம் செய்ய சென்ற விஜயகாந்தை, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ மாலை அணிவித்து, கலிங்கப்பட்டியில் உள்ள, தன் வீட்டிற்கு அழைத்து சென்று, தடபுடல் விருந்து வைத்து அசத்தினார். தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்யாமல், வைகோ அமைதிகாத்து வந்த நிலையிலும், அவரின் தொகுதியில், விஜயகாந்த் பிரசாரம் செய்ததோடு, அவரின் வீட்டிற்கும் சென்றது, நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகாந்தை அசத்திய வைகோ
விஜயகாந்திற்கு வைகோ வைத்த விருந்தால், தே.மு.தி.க., தலைமையும், அந்தக் கட்சி நிர்வாகிகளும் சமாதானம் அடைந்து உள்ளனர். வைகோ, தன் தொகுதி பிரசாரத்தை முடித்ததும், தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளுக்கும் செல்வார் என, நம்பப்படுகிறது.
அதே அஸ்திரம்
இதே விருந்து அஸ்திரத்தைதான், அன்புமணியும் கையில் எடுக்க உள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு வரும் விஜயகாந்திற்கும், அவரது மனைவி பிரேமலதாவுக்கும், தைலாபுரம் தோட்டத்தில், தடபுடல் விருந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முரசு கொட்டும் ராமதாஸ்?
விழுப்புரம் தொகுதியில், பிரேமலதா ஏற்கனவே,பிரசாரத்தை முடித்து விட்டாலும், விஜயகாந்த் வரும்போது, அவரையும் அழைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விஜயகாந்தும், பிரேமலதாவும் வீட்டிற்கு நேரில் வந்து பேசினால், வேறு வழியின்றி ராமதாஸ் சமரசமாகி, பிரசாரத்திற்கு ஒப்புக்கொள்வார் என்பது, அன்புமணியின் கணக்கு. அவரின் முயற்சிக்கு, விஜயகாந்த் ஒப்புக்கொள்வாரா? மாங்கனியை கையில் எடுத்த விஜயகாந்திற்கு ராமதாஸ் முரசு கொட்டுவாரா? என்பது சில தினங்களில் தெரியவரும்.