ஓடாமல் நின்று போன 'அரசு இயந்திரத்தை' தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்த அன்புமணி!
தர்மபுரி: செயல்படாமல் நின்று போன "அரசு இயந்திரத்தை" பாமக எம்.பியான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வந்து "தள்ளி விட்டு" ஸ்டார்ட் செய்யும் நிலையை தர்மபுரி மக்கள் இன்று கண்டனர்.
தர்மபுரி டூ தாசரள்ளி இடையிலான அரசுப் பேருந்துதான் அந்த அரசு இயந்திரம். இன்று காலை தர்மபுரி எம்.பியான அன்புமணி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது அரசுப் பேருந்து ஒன்று சாலையோரமாக நின்றிருந்தது. பயணிகள் கீழே இறங்கி நின்றிருந்தனர். ஒரே கூட்டமாக இருந்ததால் காரை நிறுத்திய அன்புமணி என்ன ஏது என்று விசாரித்தார்.
வாகனம் பழுதடைந்திருப்பதாகவும், ஸ்டார்ட் ஆக வில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து காரிலிருந்து இறங்கிய அன்புமணி, பஸ் டிரைவரிடம் நாங்கள் தள்ளி வி்டுகிறோம். நீங்க ஸ்டார்ட் பண்ணிப் பாருங்க என்று கூறினார். டிரைவரும் ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தார். இதையடுத்து அன்புமணி, பாமகவினர், பயணிகள் என அனைவரும் சேர்ந்து பஸ்ஸைச் தள்ளி விட்டனர். இதில் பஸ் ஸ்டார்ட் ஆகி விட்டது.
இதையடுத்து அனைவரும் அன்புமணிக்கு நன்றி சொல்லி பயணத்தைத் தொடர்ந்தனர்.