காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா?... ரஜினிக்கு அன்புமணி கேள்வி
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா என்று ரஜினிக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த முடியுமா என்று ரஜினிக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 31-ஆம் தேதி அறிவித்தார். மேலும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும் அவர் அறிவித்தார். எனினும் அவரது ரசிகர்களை தவிர மற்ற யாரும் இவரை வரவேற்கவில்லை என கூறப்படுகிறது.
ஏனெனில், இவரது அரசியல் பிரவேசத்தின் பின்னால் பாஜக இருப்பதாகவும் இதுவரை தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு போராடியதில்லை என்றும் மற்ற அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் அவர் அரசியலுக்கு வந்தால் அந்த ஆட்சி பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியை போன்று இருக்கும் என்றும் கருத்து நிலவி வருகிறது. லோக்ஆயுக்தா மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை தமிழக அரசு கொண்டுவர வலியுறுத்தி, பாமக சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அருகில் இருந்தபோது சிஸ்டம் சரியில்லை என்பது ரஜினிக்கு தெரியாதா. அவர் அரசியலுக்கு வந்தால் சந்திக்கத் தயார்.
மத்திய அரசை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை ரஜினியால் அமைக்க முடியுமா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.