ஜெ. மர்ம மரணம்.. சிபிஐ விசாரணை கோருகிறார் அன்புமணி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக இளைஞர் அணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது அரசியல் சித்து விளையாட்டின் ஓர் அங்கம்; இதனால் தான் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றாலும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை அரசு ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
உண்மை வெளிவராது
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முதன்முதலில் வலியுறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். இப்போது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தாலும், இதன் மூலம் எந்த உண்மையும் வெளிவராது என்பது அவருக்குத் தெரியும்.
சிலரைத் திருப்திப்படுத்த நடவடிக்கை
இன்னும் கேட்டால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமும் பினாமி முதலமைச்சருக்கு இல்லை. எங்கிருந்தோ இயக்கும் சக்திகளின் விருப்பப் படி, யாரோ சிலரை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கை தான் இது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
பெயரளவுக்கு ஆணையம்
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களால் இது வரை என்ன பயன் ஏற்படும் என்பது பாமரனுக்குக் கூட தெரியும். இதுவும் பெயரளவுக்கு அமைக்கப்படும் ஆணையம் தான்.
சிபிஐ விசாரணை
அடுத்த 6 மாதங்களில் அதனிடமிருந்து ஓர் அறிக்கை பெறப்பட்டு, அது கிடப்பில் போடப்படும் சடங்கு அரங்கேற்றப்படும். எனவே, வெற்றுச் சடங்குகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.