மாற்றம்.. முன்னேற்றம்.. நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு அன்புமணி வாழ்த்து
சென்னை: மாற்றத்தை ஏற்படுத்தினால் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நடிகர் நடிகையர் நம்பியதன் பலனாகவே நடிகர் சங்கத் தேர்தலில் இளைய தலைமுறைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் புதிய தலைவராக நடிகர் நாசர் அவர்களும், பொதுச்செயலாளராக நடிகர் விஷால் அவர்களும், பொருளாளராக நடிகர் கார்த்தி சிவக்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற பதவிகளுக்கும் அவர்களுடைய அணியை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் சங்கத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தரப்பினரே நிர்வாகிகளாக இருந்து வந்த நிலையில், இந்த தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தினால் முன்னேற்றம் காணலாம் என்று நடிகர், நடிகைகள் நம்பியதன் பயனாகவே இத்தேர்தலில் இளைய தலைமுறைக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தேர்தல் போட்டியை மறந்து அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும், நலிவடைந்த கலைஞர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நடிகர் சங்கத்தினரின் மனநிலை எவ்வாறு இருந்ததோ, அதேபோல் தான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையும் உள்ளது. நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டதைப் போல தமிழ்நாட்டிலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்களின் விருப்பம் நிறைவேறப் போவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.